அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருக்கும் Runway 34 படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு இந்திய பைலட் பெடரேஷன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படதாகக் கூறப்படும் ரன்வே 34, கொச்சி ஏர்போர்ட்டில் கடந்த 2015-ல் நடந்த பிரபலமான சம்பவத்தை ஒட்டியே நகர்கிறது..
கொச்சி விமான நிலையத்தில் என்ன நடந்தது?
2015 ஆகஸ்ட் 18-ம் தேதி அதிகாலை நேரம் அது. மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த வேளையில் கத்தாரின் தோஹாவில் இருந்து கொச்சி விமான நிலைய வான் எல்லைக்குள் அதிகாலை 5.45 மணியளவில் நுழைந்தது ஜெட் ஏர்வேஸின் 9W 555 விமானம். அந்த விமானத்தில் 141 பயணிகள், விமான நிறுவன பணியாளர்கள் 8 பேர் இருந்தனர். கொச்சி விமான நிலைய வான் எல்லைக்குள் விமானம் நுழைந்தபோது, அதில் 4,844 கிலோ எரிபொருள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், மோசமான வானிலை காரணமான விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை. கொச்சியில் மூன்று முறை தரையிறங்க முயற்சித்த போதும், அந்த முயற்சிகள் தோல்வியில் முடியவே, விமானம் தரையிறங்க முடியாமல் கொச்சி வான் எல்லையிலேயே ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தது. இந்த மூன்று முயற்சிகளால் முறையே 4,699 கிலோ, 3,919 கிலோ, மற்றும் 2,644 கிலோ என அதன் எரிபொருள் இருப்பு குறைந்துகொண்டே வந்திருக்கிறது.
இதனால், திருவனந்தபுரத்துக்கு அந்த விமானம் திருப்பிவிடப்பட்டது. கொச்சியின் அருகே இருக்கும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் அதே பிரச்னைதான் இருந்திருக்கும் என்று விமானத்தின் கேப்டன் கணித்திருப்பார் என்று தெரிகிறது. அதற்கடுத்தபடியாக அருகில் இருக்கும் விமான நிலையம் என்று பார்த்தால், பெங்களூரைச் சொல்லலாம். கொச்சியில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் பெங்களூருக்கு விமானம் பயணிக்க வேண்டுமென்றால், 3,306 கிலோ எரிபொருள் வேண்டும் என்கிற நிலையில் திருவனந்தபுரத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. இதனால், முடிந்தவரை கொச்சியிலேயே தரையிறங்கலாம் என்று 1,324 கிலோ எரிபொருளுடன் 5,6 என அடுத்த இரண்டு முறை தரையிறங்க முயற்சி செய்திருக்கிறார்கள் விமானிகள். ஆனால், இந்த முயற்சிகளும் Poor-Visiblity-யால் கைகூடாமல் போயிருக்கிறது. இந்த முயற்சிகளால், விமானத்தின் எரிபொருள் இருப்பு 898 கிலோ மற்றும் 662 கிலோவாகக் குறைந்திருக்கிறது.
இறுதியாக `May Day’ என்கிற அறிவிப்போடு ஏழாவது முயற்சியில் கொச்சி விமான நிலையத்தில் அந்த ஜெர் ஏர்வேஸ் விமானம் Blind Landing முறையில் தரையிறங்கியிருக்கிறது. பிளைண்ட் லேண்டிங் என்றால், ஓடுதளம் இருக்கும் இடம் சரியாகத் தெரியாத நிலையில், கணிப்பின்படி தரையிறக்குவது. இதனால், விமானம் சேதமடைவதோடு பயணிகளுக்குக் காயம் ஏற்படவும் வாய்ப்பு அதிகம். அதனாலேயே, இந்த மெத்தட் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பயணிகளைப் பத்திரமாகத் தரையிறக்கிய கேப்டனின் செயலை ஒருதரப்பினர் பாராட்டிய அதே நிலையில், இது கண்மூடித்தனமான முடிவு என அவரை மற்றொரு தரப்பினர் விமர்சிக்கவும் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விமான கேப்டன், பின்னர் கோ-பைலட்டாக டீ-புரமோட் செய்யப்பட்டார். இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை விசாரணையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து உருவாக்கப்பட்ட கதையில் கேப்டன் விக்ராந்த் கண்ணா கேரக்டரில் அஜய் தேவ்கன் நடித்திருக்கிறார்.
Also Read – Elon Musk கார்ப்பரேட் மான்ஸ்ட்ரா… உலகின் டாப் பில்லினியரானது எப்படி?
k2mumk