அம்மா உணவகம் நஷ்டத்துல இயங்குதுனு தகவல்கள் வெளிய வந்தப்போ, நிறைய பேர், அம்மா உணவகம் லாப நோக்குல நடத்தப்பட்டது இல்லை. வறுமையில் வாடும் மக்களின் பசியை போக்க தொடங்கப்பட்ட திட்டம்னு குரல் கொடுத்தாங்க. நடிகர்கள்ல தொடங்கி வீடு இல்லாமல் சாலையோரம் தூங்குற நபர்கள் வரைக்கும் அம்மா உணவகம் லாக் டௌன்ல கோயில் மாதிரி இருந்துச்சுனே சொல்லலாம். அம்மா உணவகத்துல சாப்பிட்ட ஆட்டோ டிரைவர்வின் எமோஷனால கதை கேள்விபட்ருக்கீங்களா? அம்மா உணவகம்னு அதுக்கு பெயர் வைச்சது யார் தெரியுமா?
திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், டெலி ராஜா. தச்சநல்லூர் அம்மா உணவகத்தில் சாப்பிடணும்னு அவருக்கு ரொம்ப நாளா ஆசை. கடந்த ஜூன் மாதம் ஒருநாள் வழக்கமான வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு அந்த உணவகத்துக்கு மதியம் சாப்பிட போய்ருக்காரு. அவர் சாப்பிட்டுட்டு இருக்கும்போது ஆட்டோ டிரைவர் ஒருத்தர் சாப்பிட வந்திருக்காரு. ஆட்டோ டிரைவர்கிட்ட இவர் போய் பேச்சு கொடுத்ததும், “உங்களப் பார்த்தா வசதியான ஆள் மாதிரி தெரியுது. இங்க சாப்பிட வந்திருக்கீங்க?”னு கேட்ருக்காரு. அவர் சிரிச்சிட்டே, வெளித்தோற்றத்தை மட்டும் வைச்சு எடை போடாதீங்கனு பதில் கொடுத்துருக்காரு. ராஜா, நீங்க வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்து சாப்பிடலாம்ல?னு கேட்ருக்காரு. அதுக்கு அந்த ஆட்டோ டிரைவர், “நான் காலைல தொழிலுக்கு வந்துருவேன். திரும்ப வீட்டுக்குப் போக நைட் ஆயிடும். அதனால, மதியானம் அம்மா உணவகத்துக்கு சாப்பிட வந்துருவேன். வெறும் 8 ரூபாய்க்கு வயிறார சாப்பிட்டுட்டு போவேன். மற்ற ஹோட்டல்ல சாப்பிட போனால், 60, 70 ரூபாய் ஆகும். இப்போ இருக்குற நிலைமைல அவ்வளவு ரூபாய்லலாம் சாப்பிடுறது கஷ்டம். இங்க சாப்பிட்டுட்டு மீதி வரக்கூடிய 50 ரூபாய்க்கு குழந்தைகளுக்கு திங்க பண்டம் எதாவது வாங்கிட்டு போவேன்”னு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டதும் டெலி ராஜாவுக்கு கண்கள் கலங்கி இருக்கு. இந்தப் பதிவை அவரோட சோஷியல் மீடியால போட்ருந்தாரு. அம்மா உணவகத்தை மூடக்கூடாதுனும் தன்னோட சார்பில் கோரிக்கை வைச்சிருந்தாரு. அரசியல் நோக்கத்துக்காக இதை நான் சொல்லல, இந்த அம்மா உணவகம் ஏழை, எளிய மக்களோட வாழ்க்கைக்கு வரப்பிரசாதம்னு குறிப்பிட்ருந்தாரு. உண்மையிலேயே ரொம்ப நெகிழ்ச்சியான பதிவாகதான் இருந்துச்சு. இவரோட பதிவு சோஷியல் மீடியால செம வைரலாகவும் போச்சு.
அம்மா உணவகங்களை மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் நிறைய இடங்கள்ல நடத்துறாங்க. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த அம்மா உணவகம் பசியாற்றுது. கொரோனா லாக்டௌன் காலத்துல ஏகப்பட்ட மக்கள் இந்த அம்மா உணவகத்தை மட்டுமே நம்பி இருந்தாங்க. குறிப்பா வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் இந்த உணவகத்தை சார்ந்திருந்தாங்க. இங்க சப்பாத்தி போடுறதை நிறுத்துனாங்க. அந்த சமயத்துல வடமாநில தொழிலாளர்கள் எல்லாரும் அவ்வளவு ஏமாற்றமடைஞ்சாங்க. அம்மா உணவகம் தோல்வியடைந்த திட்டம்னு ஏகப்பட்ட பேர் சொன்னாங்க, ஆனால், எமோஷனலா எங்க அம்மா உணவகம் டச் ஆச்சு தெரியுமா? ஜெயலலிதா இறந்த சமயம், தமிழ்நாடு முழுக்க எல்லா உணவகமும் சில நாள்கள் அடைக்கப்பட்டுருந்தது. அந்த சமயம் அம்மா உணவகம் செயல்பட்டது. இந்த திட்டம் மக்கள் மத்தில மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதைப் பார்த்து ஒடிசா, கர்நாடகா, ஆந்திராலயெல்லாம் இந்த திட்டத்தை அவங்க மாநில தலைவர்கள் பெயரை வைச்சு தொடங்குனாங்க. ராஜஸ்தான்ல இந்த திட்டத்தை செயல்படுத்தணும்னு அங்க இருந்த அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து உணவங்களை பார்வையிட்டாங்க. செயல்திட்டங்களை வாங்கிட்டு போனாங்க. இன்னும் சென்னைலலாம் ரிக்ஷாகாரங்க இருக்காங்க. அவங்க மற்றும் தூய்மை பணியாளர்கள் எல்லாருக்கும் லாக்டௌன்ல விதவிதமா விருந்து வைச்சது, அம்மா உணவகம்தான். நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென் தன்னுடைய An Uncertain Glory – India and its Contradictions-ன்ற புத்தகத்துல, அம்மா உணவகத்தோட கட்டமைப்பு, அதனுடைய தேவை மற்றும் சிறப்பம்சங்களை பத்தி கிட்டத்தட்ட பத்து பக்கங்களுக்கு எழுதியிருக்காரு.
Also Read – ஆ.ராசா-வின் 55 கோடி ரூபாய் சொத்து முடக்கம்.. என்ன நடந்தது!
கொரோனா லாக்டௌன் நேரத்துலதான் பலரும் அம்மா உணவகத்தோட தேவையை உணர்ந்தாங்கனே சொல்லலாம். நிறைய இடங்கள்ல கூட்டம் அப்படி அலைமோதிச்சு. இதுதொடர்பா நிறைய புகைப்படங்கள் சமூக வலைதளங்கள்ல வைரலாச்சு. ஈரோட்டுல காந்திஜி ரோட்டுல அம்மா உணவகம் ஒண்ணு இருக்கு. அந்தப் பகுதியைச் சேர்ந்த எளிய மக்களுக்கு அந்த நேரத்துல பசியாற்றியது, இந்த உணவகம்தான். இலவசமாக இந்த உணவகத்துல உணவு கொடுத்தாங்க. அதை வாங்க வரிசைல பெரியவங்க, வீட்டுல சமைக்க வழியில்லாதவங்கலாம் வந்து நின்னாங்க. ஒரு பக்கம் வெயில், இன்னொரு பக்கம் கொரோனா அச்சம், அப்படியே இன்னொரு பக்கம் பசி எல்லாம் சேர்ந்து மனுஷங்களை எந்த நிலைக்கும் யோசிக்க வைக்கும். அங்க அம்மா உணவகத்துக்கு உணவு வாங்க வந்தவங்க வெளிய வட்டம் போட்டு அதுல செருப்பு வைச்சு காத்துட்டு இருந்தாங்க. இந்த ஃபோட்டோ வெளியானது ரொம்பவே எமோஷனலானதா இருந்தது. அப்போ, எல்லாருமே சொன்ன விஷயம், “இந்த வெயில்ல நாங்க நிக்கலைனா, இன்னைக்கு பட்டினிதான் கிடக்கணும்”ன்றதுதான். மதுரைலயும் ஊரடங்கு நேரத்துல அம்மா உணவங்களில் விற்பனை வழக்கத்துக்கு மாறாக அதிகமானது. அன்றாடம் சம்பளம் வாங்கும் சினிமா டெக்னீசியன்களில் இருந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் வரைக்கும் ஊரடங்கு நேரத்துல அம்மா உணவகத்துலதான் சாப்பிட்டாங்க. இதை நிறையவே புகைப்படமாக நம்மளால பார்க்க முடிஞ்சுது. இவ்வளவு நல்லது இந்த உணவகத்தால நடந்துருக்கு. ஆனால், அதை ஈஸியா தூக்கி எறியலாமானு பேசுறாங்கன்றது சமூக ஆர்வலர்களின் வருத்தம். அதெல்லாம் சரி, இந்த உணவகத்தை தொடங்கலாம்ன்ற ஐடியா எப்படி வந்துச்சு? எப்போ முதன்முதல்ல இந்த உணவகத்தை திறந்தாங்க? வாங்க அதையும் பார்த்துருவோம்.
சைதை துரைசாமி 2006ல இருந்து 2011 வரை சொந்த அறக்கட்டளை மூலமா மலிவு விலை உணவகம்னு நடத்துனாரு. அதன்மூலமா கிடைச்ச எக்ஸ்பீரியன்ஸை ஜெயலலிதாக்கிட்ட போய் சொல்லியிருக்காரு. அவங்க இந்த திட்டத்துக்கு உடனே ஓகே சொன்னதும், அதற்கான வேலைகள்ல சைதை துரைசாமி இறங்கியிருக்காரு. அந்த திட்டத்துக்கு அம்மா உணவகம்னு பெயர் வைச்சதும் இவர்தான். தூய்மைப் பணியாளர்கள், பேச்சுலர்ஸ்லாம் வெறும் டீ, வடையோட காலை உணவை முடிச்சுப்பாங்க. ஆனால், அம்மா உணவகம் வந்த பிறகுதான் காலை சாப்பாடுனு ஒண்ணு அவங்க சாப்பிட ஆரம்பிச்சாங்க. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒருதடவை பேசும்போது, “எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் அம்மா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. வருமான இழப்பு ஏற்பட்டாலும் அதை தொடர்ந்து நடத்த அரசு முயற்சி செய்து வருகிறது. இன்னைக்கு சமைத்த உணவை கீழ கொட்டுற சூழல்தான் நிலவுது”னு பேசியிருந்தாரு. அதுக்கு அதிகளவில் சோஷியல் மீடியாக்களில் எதிர்ப்பு கிளம்பிச்சு. அம்மா உணவகத்தை மூடக்கூடாதுனு பல இடங்கள்ல ஆர்பாட்டங்கள் நடந்துச்சு. கடைசில மேயர் பிரியா அம்மா உணவகம் செயல்படும்னு சொன்னாங்க. இருந்தாலும் அம்மா உணவகத்துல அம்மா புகைப்படம் வைக்கலைனு சொல்லி கடுமையான வன்முறைகளையெல்லாம் அ.தி.மு.கவைச் சேர்ந்தவங்க கையில எடுத்தாங்க. அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் கணக்கு வழக்குகளுக்கும் அப்பாற்பட்டு அம்மா உணவகங்களை பார்க்கணும் அப்டின்றதுதான் பலரோட கோரிக்கையாவே இருந்துச்சு வருது. மருத்துவமனைகளில் அம்மா உணவங்கள் கொண்டு வரப்பட்டதுலாம் உண்மையாகவே செமயான திட்டம்னுதான் தோணும். மொத்தமா கால்குலேட் பண்ணி பார்த்தா அம்மா உணவகம் மக்கள் மத்தில அதிகமா வரவேற்பு பெற்ற திட்டமாதான் இருக்கு.
அம்மா உணவகம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்றதையும் அம்மா உணவகத்துல சாப்பிட்ட உங்களின் கதைகளையும் மறக்காமல் கமெண்டில் சொல்லுங்க.