செபிக்கு தலைமையேற்கும் முதல் பெண் – Madhabi Puri Buch-ன் மிரட்டலான 3 உத்தரவுகள்!

சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI)-யின் தலைமைப் பொறுப்பில் Madhabi Puri Buch-ஐ நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த பொறுப்புக்கு வரும் முதல் பெண் அதிகாரி மட்டுமல்ல, தனியார் துறையில் இருந்து செபியின் தலைமையை ஏற்கும் முதல் நபர் என்கிற பெருமையையும் மதாபி பெறுகிறார். யார் இவர்.. அவரின் மிரட்டலான மூன்று உத்தரவுகளையும் அவரின் பின்னணி பற்றியும் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Madhabi Puri Buch

madhabi puri buch
madhabi puri buch

நிதித் துறையில் ஏறக்குறைய முப்பதாண்டுகள் அனுபவம் மிக்க மதாபி, பள்ளிப்படிப்பை மும்பையிலும் டெல்லியிலும் நிறைவு செய்தார். பின்னர், டெல்லியில் பிரபலமான செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை கணிதவியலில் பட்டம் பெற்ற அவர், அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். ஐசிஐசிஐ வங்கியில் Project Finance Analyst ஆகத் தனது கரியரைத் தொடங்கிய அவர், அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு உயர்ந்தார். 2009 பிப்ரவரி முதல் 2011 மே வரையில் அந்தப் பொறுப்பில் அவர் இருந்தார். அதன்பின்னர், சிங்கப்பூரைச் சேர்ந்த Greater Pacific Capital LLP நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த அவர், ஷாங்காயின் New Development Bank-லும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். Idea Cellular Ltd, Zensar Technologies, மற்றும் Max Healthcare உள்ளிட்ட நிறுவனங்களில் non-executive director பொறுப்பும் வகித்திருக்கிறார்.

செபியில் பொறுப்பு

SEBI
SEBI

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 5-ல் செபியின் முழுநேர உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்பைக் கடந்த அக்டோபரில் ராஜினாமா செய்த அவர், செபியின் தலைமைப் பொறுப்புக்கு விண்ணப்பித்திருந்தார். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சி.இ.ஓ சித்ரா ராமகிருஷ்ணா சர்ச்சை வெளியாகி சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த நிலையில், நிர்வாகரீதியில் துணிச்சலான முடிவெடுக்கும் மதாபி அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். 1984 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக்காலம் 2022 பிப்ரவரி 28-ம் தேதியோடு முடிவுக்கு வந்த நிலையில், மார்ச் 1-ல் அந்தப் பொறுப்பை இவர் ஏற்க இருக்கிறார்.

Madhabi Puri Buch-ன் 3 மிரட்டல் உத்தரவுகள்!

ZEE Entertainment

புகழ்பெற்ற ZEE Entertainment குழுமம் மீதான Insider Trading புகாரில் தனிநபர்கள் உள்பட 15 பேர் மீது Buch குற்றம்சாட்டி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அந்த குழுமத்துக்கு நன்மை பயக்கும் வகையில் செபியின் விதிமுறைகளை மீறி பங்குகள் விற்பனையில் Insider Trading முறையில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

Zee Entertainment
Zee Entertainment

2019-2020 முதல் காலாண்டு வருமானம் குறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட இருந்த நேரத்தில், அந்தக் குழுமத்தின் பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகள் நடந்ததை செபி விசாரணையில் கண்டுபிடித்தது. இதன்மூலம், பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களோ, தனிநபர்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை செபி பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு உணர்த்தியது.

Deep Industries

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்று Deep Industries. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி உள்பட பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமாகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்துக்கு எதிராகக் கடந்த 2021-ல் இவர் பிறப்பித்த உத்தரவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

Deep Industries
Deep Industries

காரணம், பொதுவெளியில் அறிவிக்கப்படாத பங்குகள் விலை (UPSI) தொடர்பான விவரம் குறித்து Deep Industries மற்றும் பங்குச் சந்தையில் உள்ள Insider ஒருவருக்குமான தொடர்பைப் பற்றி விவரிக்க செபி பயன்படுத்திய விசாரணை முறைதான் இந்த விவாதத்தை எழுப்பக் காரணம். `குற்றம்சாட்டப்பட்ட இருதரப்பினரின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தோம். அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் நண்பர்களாக இருப்பது தெரியவந்தது. மேலும், இருவருமே பரஸ்பரம் அவர்களின் Post-களை Like செய்திருப்பதும் தெரிந்தது. இதன்மூலம், Insider, தனது அலுவலக அதிகாரிகளோடு சமூக வலைதளங்கள் உள்பட பல்வேறு முறையில் தகவல் தொடர்பில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது’’ என்று தனது உத்தரவில் Madhabi Buch குறிப்பிட்டிருந்தார். இது பங்குச் சந்தைகளில் நெகட்டிவான எதிர்வினையை ஏற்படுத்தியிருந்தாலும், இருதரப்புகள் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தவே சோசியல் மீடியா மூலம் அவர் விசாரணை நடத்தினார் என்றும் UPSI தொடர்பான தகவல்களைப் பகிர்வது தன்னிச்சையான முடிவுதான் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

Sahara Group மீதான நடவடிக்கை

Subrata Roy
Subrata Roy

பங்குச் சந்தைகள் மூலம் முறைகேடாக நிதி திரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான Sahara Group நிறுவனம் மீது 2018-ல் Madhabi Buch எடுத்த நடவடிக்கை, அந்த நிறுவனத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த நிறுவனம் விருப்பப்படி முழுமையாக மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் வாயிலாக பங்குச் சந்தை மூலம் பொதுமக்களிடம் இருந்து முறைகேடாக ரூ.14,000 கோடி நிதி திரட்டியதாக அவர் குற்றம்சாட்டினார். இது செபி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நிதியை முதலீட்டாளர்களிடம் திரும்ப அளித்துவிட்டதாக சஹாரா நிறுவனம் வாதாடியது. ஆனால், நிதியைத் திரும்ப அளித்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அந்த நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார். சுப்ரதா ராய்க்குச் சொந்தமான அந்த நிறுவனம் 24,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே செபி உத்தரவிட்டிருந்த நிலையில், 14,000 கோடி ரூபாய் விவகாரத்தில் இவரது உத்தரவு அந்த நிறுவனத்தின் மீதான நெருக்கடியை அதிகரித்தது.

Also Read – முகம் தெரியாத சாமியாரின் ஆலோசனை; கோடிக்கணக்கில் முறைகேடு – NSE சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top