அண்ணா பல்கலைக்கழகம்

32 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் – அதிர்ச்சியூட்டும் அண்ணா பல்கலை. மோசடி!

அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளாக உள்ள தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணா பல்கலை. மோசடி!

தமிழ்நாட்டில் 433 தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில், 224 பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் பணியாற்றி வருவதாகக் கணக்கு காட்டப்பட்டிருப்பதை தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடம் அம்பலப்படுத்தியது.

AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் இணையதளத்தில் ஒவ்வொரு பேராசிரியருக்கும் யுனீக் ஐடி எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மோசடி அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுந்தது. ஆனால், யுனீக் ஐடியை கொடுக்காமல் போலி எண்களை உள்ளீடு செய்து ஒரே பேராசிரியர் 10-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வந்தது பற்றி அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழக விசாரணை

இந்த விவகாரம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், “பதிவு செய்துள்ள 52,500 பேராசிரியர்களில் 2,000 பேராசிரியர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இந்த மோசடியில் 189 பேர் ஈடுபட்டிருக்கிறார். இவர்கள், அந்த 2,000 பணியிடங்களை நிரப்பியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரே நேரத்தில் ஒரு பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றி வருவதாகவும், மற்றொருவர் 10 கல்லூரிகளில் பணியாற்றுவது போலவும் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

அவர்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு எண்களை மாற்றி மாற்றிக் கொடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மோசடியை நாங்கள் அவர்களின் பிறந்தநாளை வைத்துக் கண்டுபிடித்தோம். இப்படி மோசடியாகத் தகவல் தந்த பேராசிரியர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து உயர்கல்வித் துறை சார்பில் அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்டிருக்கும் நிலையில், வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் விசாரணை அறிக்கை கோரியிருக்கிறார்.

Also Read – தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் – 1937, 1948, 1965-ல் என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top