bigg boss tamil

பிக் பாஸ் சீசன் 5 : 50 நாள்களில் நடந்தது என்ன!?

பிக் பாஸ் ஐந்தாம் சீசன் ஐம்பது நாளை கடந்திருக்கிறது. முதல் சில நாள்கள் மட்டும் பார்த்துவிட்டு சுவாரஸ்யமாக இல்லை என பார்க்காமல் விட்டவர்கள் இந்த கட்டுரைப் படித்து ஐம்பது நாள்கள் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள். ‘இதுவரைக்கும் நான் இந்த சீசனைப் பார்க்கவே இல்லை’ என்றால் இந்த லிங்க்கில் இருக்கும் கட்டுரை படித்துவிட்டு இந்த கட்டுரையை படிக்கலாம்.


எலிமினேஷன்:

Varun, Nadia, Abhishek, MAdhumitha, Chinnaponnu
Varun, Nadia, Abhishek, MAdhumitha, Chinnaponnu


பிக் பாஸ் சீசன் ஐந்தில் இதுவரைக்கும் எலிமினேட் ஆனவர்கள் நடியா சாங், அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி. இதில் இரண்டாம் வாரத்தில் வெளியேறிய அபிஷேக் 47வது நாளில் மீண்டும் பிக் பாஸிற்குள் நுழைந்தார். இந்த சீசனுக்கு முந்தைய நான்கு சீசன்களிலும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கலந்துகொண்டப்போது, அவர்கள் யாரையும் முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்ததில்லை. தமிழர்களுக்கு அவர்கள் அதிகம் பரிச்சியம் இல்லாததாலும் அவர்கள் நிகழ்ச்சியில் இருக்கும் வரை, அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்கள் அவர்களுக்காக நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள் என்பதற்காகவும் வெளிநாட்டில் இருந்து வரும் போட்டியாளார்களை சில வாரங்கள் நிகழ்ச்சியில் வைத்திருப்பார்கள். ஆனால், இந்த சீசனில்தான் வெளிநாட்டு போட்டியாளரை முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்திருக்கிறார்கள்.

டாஸ்க்:

ஒவ்வொரு வாரமும் லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்க் என ஒன்று கொடுக்கப்படும். ஒருசில டாஸ்க்குகள் கடந்த நான்கு சீசன்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி சில டாஸ்க்குகள் இந்த சீசனிலும் கொடுக்கப்பட்டாலும் சில புதிய டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்குகள் வீட்டிற்குள் பல சண்டைகளையும் ஏற்படுத்தியது. ‘செண்பகமே… செண்பகமே’ எனும் டாஸ்க்கில் தெர்மாகோலில் செய்த ஒரு மாட்டை வைத்து அதில் வரும் பாலை வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து சின்ன பாட்டில்களில் நிரப்பினார்கள். இதில் பாலை பிடிப்பதற்காக முண்டி அடித்துக்கொண்டதில் சிபி – அக்‌ஷராவுக்குள் எழுந்த சண்டை இன்றுவரை நீடித்து வருகிறது. அதேபோல், பாலில் யாருக்கும் தெரியாமல் தண்ணீர் கலந்தும் சிலர் ஊழல் செய்தார்கள். அதனால் சில சண்டைகளும் வந்தன.

 உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் - பிக் பாஸ்
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்

நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற டாஸ்கில் போட்டியாளர்களின் பெயர்களில் பொம்மைகள் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே சர்க்கஸ் கூடாரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்கள் அவர்களின் பெயர் போட்ட பொம்மையை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக வேறு ஒரு போட்டியாளரிடம் ஒப்பந்தம் பேசி தங்களுக்குள் மாற்றிக்கொள்ளவேண்டும். சர்க்கஸ் மணி அடித்ததும் பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்திற்குள் நுழைய வேண்டும். கடைசியாக நுழையும் நபரின் கையில் யாருடைய பொம்மை இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்த போட்டி ஒரு கட்டத்தில் ஒப்பந்தந்தை மீறி யாரை போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களின் பொம்மை எடுத்துக்கொண்டு வேண்டும் என்றே மெதுவாக சென்றார்கள். இதனால் வருண், அக்‌ஷரா, நிரூப், அபிணய் என சிலருக்குள் சண்டையும் ஏற்பட்டது.

உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு ஒருவரின் கண்ணாடியாக இன்னொருவர் இருந்து அவர்கள் செய்வதை அப்படி இன்னொருவரும் செய்ய வேண்டும் என்றும் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கண்ணாடி போல் வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இதில் பிரிக்கப்பட்ட ஜோடிகள் அனைத்தும் ஏற்கெனவே சண்டைப் போட்டு பஞ்சாயத்தில் இருந்தவர்களாகவே பிக் பாஸ் பிரித்திருந்தார். இசைவாணி – இமான், நிரூப் – அபிணய், அக்‌ஷரா – சிபி என முதல் நாளும் இசைவாணி – தாமரை, வருண் – நிரூப், ராஜு – பிரியங்கா என இரண்டாம் நாளும் ஜோடிகள் மாற்றப்பட்டது இந்த டாஸ்க்கில் கூடுதல் சிறப்பாகவும் இருந்தது.

ஆளுமை காயின்:

Priyanka
Priyanka


பிக் பாஸ் ஐந்தாம் சீசனில் பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து ஆளுமை திறன் வழங்கப்பட்டிருக்கிறது. நெருப்பு காயின் வைத்திருப்பவருக்கு கிச்சன் ஏரியாவும், நிலம் காயினுக்கு பெட்ரூம் ஏரியாவும், ஆகாயம் காயினுக்கு லிவ்விங் ஏரியாவும், நீர் காயினுக்கு பாத்ரூம் ஏரியாவும், காற்று காயினுக்கு கார்டன் ஏரியாவும் என தனிதனியாக காயின்களை வைத்து அதை போட்டியாளர்கள் கைபற்றுவதற்கான போட்டியும் நடந்தது. அதில் நெருப்பு காயின் இசைவாணிக்கும், நிலம் நிரூப்பிற்கும், ஆகாயம் பாவ்னிக்கும், நீர் வருணுக்கும், காற்று சுருதிக்கும் சென்றது. இதில் இசைவாணியும் சுருதிவும் எலினிமினேட் ஆனதால் அந்த காயின்கள் இனி செயல்படாது. இந்த காயின்களை வைத்து வீட்டின் தலைவர் பதவியை கைபற்றலாம், நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம், ஒரு வாரம் தங்கள் காயினுக்கு சொந்தமான பகுதியை ஆளலாம் என பல சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த காயின் 10 வாரங்கள் வரைக்கும்தான் செயல்படும்.

முக்கிய நிகழ்வுகள்:

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறுகளில் வரும் கமல் எபிசோடுகள்தான் நன்றாக இருக்கிறது என்கிற பேச்சு இருக்கும். வார நாள்களில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு கமல் வாரயிறுதியில் என்ன சொல்லப்போகிறார் என்பதுதான் அந்த பேச்சுகளின் அடிப்படை. ஆனால், இந்த சீசன் ஆரம்பித்த முதல் இரண்டு மூன்று வாரங்கள் கமல் எபிசோடுகளே போர் அடிக்கிற உணர்வு இருந்தது. ஏனென்றால், நிகழ்ச்சியில் பெரிதாக சர்ச்சைக்குரிய விஷயமோ, பரபரப்பான சண்டையோ இல்லாமல் இருந்தது. தாமரை வசமிருந்த காற்று காயினை சுருதியும் பாவ்னியும், தாமரை உடைமாற்றிக் கொண்டிருந்தப்போது அந்த அறைக்குளேயே சென்று அவரை ஏமாற்றி காயினை எடுத்து வந்ததும்; இதை அவர்கள் திட்டமிட்டு செய்துவிட்டு ‘ப்ளானே இல்லாமல் போனோம்; காயின் இருந்துச்சு எடுத்துட்டு வந்துட்டோம்’ என அவர்கள் பொய் சொன்னதும் வீட்டிற்க்குள்ளும் வெளியிலேயும் பெரிய பேசுபொருளானது. அந்த வார கமல் எபிசோடுதான் வழக்கமான கமல் எபிசோடு போல் பரபரப்பாக இருந்தது.

பிக் பாஸ் Raju Jeyamohan
Raju Jeyamohan

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் இருந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் வரை விஜய் டிவியின் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து நடித்துவரும் ராஜூ, ‘நட்புனா என்னனு தெரியுமா’ என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தப்பிறகுதான் ராஜூவை பல இளைஞர்களுக்கு தெரியவந்திருப்பதால், அவர்களுக்கு ராஜூ மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கிறார். அவர் அடிக்கும் காமெடி பன்ச், அவரது வாழ்க்கையை அழகான திரைக்கதையாக மாற்றி சொன்னது,  மிமிக்ரி, நகைச்சுவையான உடல்மொழி என பலரும் ‘யாருப்பா இவரு; இவ்வளவு நாளா எங்க இருந்தாரு’ என தோன்ற வைத்திருக்கிறது. இந்த பிக் பாஸ் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் சிறந்த எண்டர்டெயினர் ராஜூதான்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் திருநங்கை போட்டியாளராக களமிறங்கிய நமிதா, தனது வாழ்க்கை கதையை கூறி வீட்டில் உள்ளவர்களை மட்டுமின்றி பல பார்வையாளர்களை கண்கலங்க வைத்தார். வீட்டின் சிறந்த போட்டியாளராகவும், இறுதி வாரம் வரைக்கும் வருவார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா, நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாள்களிலேயே வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். முறையாக வெளியேற்றமோ, சரியான காரணமோ இதுவரைக்கும் கூறப்படாததால் இவரின் வெளியேற்றம் மர்மமாகவே இருக்கிறது. அபிஷேக்கைப் போல இவரும் மீண்டும் வீட்டிற்குள் செல்வார் என சில தகவல்களும் சுற்றிவருகின்றன.

Choreographer Amir
Choreographer Amir

இந்த சீசனின் முறையான வொய்ல்ட் கார்ட் போட்டியாளராக கோரியோகிராபர் அமீர் சென்றிருக்கிறார். இவர் சாண்டியிடம் உதவி நடன இயக்குநராக இருந்திருக்கிறார். மேலும், கடந்த சில வருடங்களாக விஜய் டிவியோடு பயணப்பட்டு வருகிறார்.

Also Read: `மொபைலா முதல் கிரேட் கிரிகாலன் வரை..!’ – ரெண்டு படத்தின் 5 ஹைலைட்ஸ் #15YearsOfRenduMovie

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top