ஆஸ்கர் விருது மேடையில் காமெடியின் கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்கு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டார்.
ஆஸ்கர் விருது விழா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள டால்ஃபி தியேட்டரில் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த ஆவணப்படம் குறித்த அறிவிப்பை காமெடியன் கிறிஸ் ராக் வெளியிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ‘GI Jane’ படத்தில் இடம்பெற்றிருந்த டெமி மூர் ஹேர்ஸ்டைலைப் போலவே வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா பிங்கட்டின் ஹேர்ஸ்டைல் இருப்பதாக காமெடியாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் படத்தின் சீக்வெலில் ஜாடா நடிக்கலாம் என்றும் பேசினார். ஜாடாவின் ஹேர்ஸ்டைல் குறித்து கிறிஸ் ராக் பேசியது, அவரது கணவர் வில் ஸ்மித்துக்கு ஆத்திர மூட்டியது. இதையடுத்து, தனது இருக்கையில் இருந்து எழுந்துபோய் மேடைக்குச் சென்ற வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்துவிட்டு மேடையை விட்டு கீழிறிங்கினார். ‘இனிமேல் எனது மனைவி குறித்து பேசுவதைத் தவிர்த்து விடு’ என்றும் வில் ஸ்மித் கூறியது அங்கிருந்த பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் ஒரு கணம் அதிரவைத்தது. வில் ஸ்மித்தின் செயலுக்குக் கலவையான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் குவிந்தன. ஒரு சில நெட்டிசன்கள், இது திட்டமிட்டு நடந்த சம்பவமாக இருக்குமோ என்று கூட சந்தேகம் கிளப்பினர்.
அதன்பின்னர், சிறந்த நடிகருக்கான விருது வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்கான வில் ஸ்மித்துக்கு அறிவிக்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு ஏற்புரை நிகழ்த்திய வில் ஸ்மித், `நான் மனநலன் சரியில்லாத தந்தையைப் போல் நடந்துகொண்டேன்’ என்று கூறி முன்னர் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரினார். இந்த சம்பவம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. வில் ஸ்மித்தின் மனைவியான ஜாடா பிங்கட், ‘Alopecia Areata’ எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
Alopecia Areata
ஜாடா, தான் Alopecia Areata நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கடந்த 2018-ம் ஆண்டு பொதுவெளியில் முதன்முறையாக ஒப்புக்கொண்டார். இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்கள், தலைமுடியின் மயிர்க்கால்களில் பாதிப்பு ஏற்படுத்தி, முடி உதிர்வு ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி இழப்பு என்பது தலையின் ஒரு பகுதியிலோ அல்லது தலை முடி முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம். மற்றபடி வேறெந்த அறிகுறிகளும் இருக்காது. தலை மற்றும் முகத்தில் நோயின் தாக்கம் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நோய் பற்றி முழுமையான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், என்ன காரணத்துக்காக இந்த நோய் ஏற்படுகிறது என்பது பற்றிய தெளிவான தரவுகள் இல்லை. அதேநேரம், மரபுரீதியாகவும், புறச்சூழல் காரணமாகவும் இந்த நோய் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.