எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமா வில்லன் என்றால், ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. ஆனால், ஒல்லியாக இருப்பவர்களும் வில்லனாக நடிக்கலாம்; அதற்கு உடம்பு தேவையில்லை. வில்லனிசமான ஆட்டிட்யூட் இருந்தாலே போதும் என நிரூபித்தவர் ரகுவரன். தமிழ் சினிமா ரசிகர்கள் ரகுவரனை இன்றுவரைக்கும் மறக்காமல் இருக்கும்படியான கதாபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். அவரது கரியரில் நடந்த சில முக்கியமான மொமென்ட்ஸைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
-
1 ரஜினியின் ஆஸ்தான வில்லன்:
ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஏறவேண்டும் என்றால், அந்த ஹீரோ எப்படிப்பட்ட வில்லனிடம் மோதுகிறார் என்பதைப் பொறுத்து தான் அமையும். வில்லனின் கேரக்டர் எந்தளவுக்கு வலுவாக இருக்கிறதோ அதை வைத்துத்தான் ஹீரோவுக்கான மாஸும் இருக்கும். அந்த வகையில் நடிகர் ரஜினியின் மாஸ் ஏறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ரகுவரன். ஊர்காவலன், மனிதன், சிவா, ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் என பல படங்களில் நடித்து ரஜினிக்கு ஆஸ்தான வில்லனாக மாறிவிட்டார் ரகுவரன். ஆனால், ரஜினிக்கு போட்டியாக கருதப்பட்ட கமல்ஹாசனும் ரகுவரனும் இணைந்து ஒரு படம்கூட நடிக்கவில்லை.
-
2 நிஜ அருவாதான் வேணும்:
படம் குறித்த விமர்சனங்களில் ‘அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என நன்றாக நடித்த நடிகர்களை பாராட்டுவார்கள். அவர்கள் கேமராவுக்கு முன்புதான் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், நடிகர் ரகுவரன் கேமராவுக்கு பின்பும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இதற்கு இரண்டு சம்பவங்களும் உதாரணமாக இருக்கிறது.
அவர் ஒரு படத்தில் கமிட்டானதில் இருந்து அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் வரை, நிஜ வாழ்க்கையிலும் அந்தக் கேரக்டராகவே வாழ்வார் என்பதை அவரது மனைவி ரோகிணியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ‘அஞ்சலி’ படத்தில் நடிக்கும் போது வீட்டில் அன்பாகவும் வில்லனாக நடிக்கும் போது வீட்டிலும் அதே மாதிரி இருந்திருக்கிறார். இது கேமராவுக்கு பின்பு நடந்த சம்பவம். கேமராவுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் இருக்கிறது. அரண்மனை காவலன் என்கிற படத்தில் சர்வாதிகாரி கேரக்டராக ரகுவரன் நடித்திருப்பார். இதில் விஜயகுமாரை அரிவாளால் வெட்டுவது போல் ஒரு காட்சி. விஜயகுமாரும் ஸ்ரீவித்யாவும் ஆற்றில் பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது, தண்ணீருக்குள் இருந்து ரகுவரன் எழுந்து விஜயகுமாரை வெட்டுவதுதான் சீன். ரகுவரன் தண்ணீருக்குள் இருக்கும் போது அவர் அருகில் பரிசல் வரும் போது எழுந்து வெட்ட வேண்டும். ஆனால், 7 முறை டைமிங் மிஸ்ஸாகியிருக்கிறது. 7 முறையும் டம்மி அரிவாள் உடைந்து போயிருக்கிறது. அப்போது இயக்குநரிடம் ரகுவரன், ‘எனக்கு டம்மி அரிவாள் வேண்டாம். ஒரிஜினல் அரிவாள் கொடுங்க. அப்போதுதான் எனக்கு ரியலாக நடிக்க வரும்’ என்றிருக்கிறார். இதைக்கேட்ட விஜயகுமார் ஷாக்காகி, ‘நீ ரியலா நடிக்கணும்னு என்னை ரியலா வெட்டிடாத ரகு’ என சொல்லிருக்கிறார். முதலில் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அவர் விளையாட்டாகத்தான் கேட்கிறார் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், ரகுவரன் பிடிவாதமாக இருந்ததைப் பார்த்தபிறகுதான் விஷயம் சீரியஸ் என உணர்ந்திருக்கிறார்கள். யார் சொல்லியும் கேட்காத ரகுவரன், நடிகை ஸ்ரீவித்யா கொஞ்சம் கடிந்து பேசியப்பிறகுதான் டம்மி அரிவாளோடு நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். 8வது டேக்கும் ஓகே ஆகியிருக்கிறது.
-
3 டப்பிங்
ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக பல விஷயங்களில் மெனக்கெடும் ரகுவரன், டப்பிங்கில்தான் அதிகம் மெனக்கெடுவார். ஒரு வார்த்தையை குறைந்தது 100 முறையாச்சும் வேற வேற பாணியில் பேசிப் பார்ப்பார். அதில் அவருக்கு எது சரியாக இருக்கும் என நினைக்கிறாரோ அதைதான் டேக்கில் பேசுவார். பாட்ஷா படத்தில் அவர் பேசிய ஆண்டனி... மார்க் ஆண்டணி என்பது இப்படிப்பட்ட ஒரு உழைப்பிற்கு பிறகு கிடைத்ததுதான்.
-
4 இசையின் மீது தீராத காதல்:
ரகுவரனை வில்லன் நடிகர் என சுருக்கி விட முடியாது வில்லன் கதாபாத்திரங்களையும் தாண்டி முகவரி அண்ணன், ரன் மாமா, லவ் டுடே அப்பா என நல்ல, நல்ல கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், ரகுவரனுக்கு நடிப்பைவிட இசையில்தான் ஆர்வம் அதிகம். ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. கல்லூரியில் படிக்கும் போதே knock out என்கிற இசைக்குழு நடத்தி வந்திருக்கிறார். அதுபோக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பல பாடல்களையும் இசையமைத்து, பாடி அதை பதிவு செய்து வைத்திருக்கிறார். அதில் சில பாடல்களை ரகுவரனின் மரணத்திற்குப் பிறகு raghuvaran a musical journey என்கிற பெயரில் ஒரு ஆல்பமாக மாற்றி ரஜினியை வைத்து ரிலீஸ் செய்திருக்கிறார் ரோகிணி.
-
5 கடைசி படம்:
ரகுவரனுக்கு உடல்நிலை சரியில்லாத போது நடித்த படங்கள்தான் யாரடி நீ மோகினி, கந்தசாமி. இதில் யாரடி நீ மோகினி படத்தில் அவரது காட்சிகள் எல்லாம் நிறைவடைந்திருந்த நிலையில், கந்தசாமி படத்தில் மட்டும் சில நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில்தான் திடீரென ரகுவரன் தூக்கத்திலேயே காலமானார். அதன் பிறகுதான் கந்தசாமி படத்தில் ரகுவரனுக்கு பதில் ஆஷிஷ் வித்யார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
0 Comments