Raiza Wilson

பேசியல் சிகிச்சையால் அலர்ஜி… ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு – ரைசா விவகாரத்தில் என்ன நடந்தது?

மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடாகக் கேட்டிருக்கிறார் ரைஸா.

மாடலாகத் தன் கரியரை ஆரம்பித்த ரைஸா, `பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்த ரைஸா, தற்போது ஜி.வி.பிரகாஷுடன் காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐ ஆர் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் முக சிகிச்சைக்காக பைரவி என்கிற தோல் மருத்துவரை அணுகிய ரைஸாவுக்கு, அந்த மருத்துவர் செய்த சிகிச்சை விபரீதத்தில் முடிந்திருக்கிறது. சிகிச்சை முடிந்த அடுத்த நாள் ரைஸாவுக்கு வலது கண்ணுக்கு கீழ் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. அதனால், தோல் கருப்பாகவும், முகம் வீக்கமும் அடைந்திருக்கிறது. உடனே மருத்துவர் பைரவியை சந்திக்க முயன்ற ரைஸாவிடம், `அவர் ஊரில் இல்லை’ என்று கூறியிருக்கிறார்கள். போன் செய்தால் எடுக்கவும் இல்லையாம். அதனால் ஆத்திரம் அடைந்த ரைஸா, இந்த சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, தன்னுடைய போட்டோவையும் அப்லோட் செய்திருந்தார். அதன் பிறகு சமூக வலைதளத்தில் இது பெரும் பேசுபொருள் ஆனது.

ரைஸா

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், தற்போது அந்த மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடாகக் கேட்டிருக்கிறார் ரைஸா. அதனைத் தரவில்லை என்றால் நீதிமன்றம் வரைக்கும் செல்வேன் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு மருத்துவர் பைரவி, `இந்த சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகள் வரலாம் என்பது ரைஸாவுக்கு முன்பே தெரியும். இந்த சிகிச்சை இதற்கு முன்பும் ரைஸா செய்திருக்கிறார். அப்போது அவருக்கு எந்த பக்கவிளைவும் வந்ததில்லை. ஆனால், கடந்த முறை சிகிச்சைக்குப் பின் பக்கவிளைவுகள் வந்துள்ளது. ஒன்றிரண்டு வாரங்களில் அதுவே சரியாகிவிடும். ஆனால், எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பவேண்டும் என்றே ரைஸா இப்படி செய்திருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், அவரிடம் நாங்கள் நஷ்டஈடு கேட்போம்’ என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top