தமிழ் சினிமாவில் கடந்த 20 வருஷங்களை நிறைவு செய்திருக்கார், இயக்குநர் சுசீந்திரன். சமூக பிரச்னை பேசுற படங்கள்னாலும் சரி, கமர்சியல் படம்னாலும் சரி கொஞ்சம் வித்தியாசமா, கொஞ்சம் கனமான டோன்ல சொல்ற இயக்குநர். இயக்குநரா தன்னோட பாதையை அழுத்தமா பதிவு செய்தவர். வெண்ணிலா கபடிக்குழு மூலமா தமிழ்சினிமாவுக்குள்ள இயக்குநர வந்து பல படங்களை ரசிக்கிற மாதிரி கொடுத்தவர். அவரோட இண்ட்ரஸ்டிங் பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சொந்த ஊர் . 18 வயசுல சினிமாவுக்கு வந்தார். சென்னைக்கு வந்து மூன்றரை வருஷம் கழிச்சு, அப்புறம் சபா கைலாஷ், எழில் இவங்ககிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தார். சுமார் 12 வருஷ ஜர்னிக்கு அப்புறமா பல போராட்டத்துக்குப் பின்னால வெண்ணிலா கபடிக்குழு படத்தை இயக்கினார். கபடி விளையாட்டை மையமா வச்சுகலகலப்பான திரைக்கதையோட கிராமங்கள்ல இருக்கிற சாதிய அரசியலை தோலுரிச்ச படம். ஆர்ட்டையும், கமர்சியலையும் ஒண்ணா இணைச்சு கனமான க்ளைமாக்ஸோட அற்புதமான படைப்பா கொடுத்திருந்தார். பல மொழிகள்ல ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்தப் படத்துலதான் இன்னைக்கு முன்னணி நடிகரா இருக்க விஷ்ணு விஷால், விசுதலைல கலக்கியிருக்கிற சூரினு ரெண்டுபேரை முதல்முதலா லைம்லைட்டுக்கு கொண்டுவந்தார் சுசீந்திரன். இதுல விஜய்சேதுபதியும் ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சிருப்பார். இப்படி நடிகர்களை பார்த்துப் பார்த்து அந்தப்படத்துல செலக்ட் பண்ணியிருந்தார்.
அதுக்கப்புறம் இரண்டாவது படம் ‘நான் மகான் அல்ல’ ஒரு சமூக குற்றத்தை மையமாக வச்சுக்கிட்டு அதை ஆக்ஷன் ஜானர்ல எடுத்திருந்தார். அழகான நல்ல குணங்கள் கொண்ட குறும்புக்கார ஹீரோ, அழகான காதலி, ஈர்ப்பான காதல் காட்சிகள், குடும்பம், ஜாலியான நண்பர்கள், இயல்பான நகைச்சுவை, பக்காவான ஆக்ஷன் என முழுக்க கலகலப்பான பொழுதுபோக்குப் படமா அமைஞ்சது. கார்த்தியை பொறுப்பான மிடில்க்ளாஸ் பையனா காட்டின முதல்படம். படம் மிகப்பெரிய வெற்றி. வெண்ணிலா கபடிக்குழு பண்ண சுசீந்திரனா இதுன்னு கொஞ்சம் வியக்கும்படியா அடுத்தப் படத்தைக் கொடுத்ததால எல்லா ஹீரோக்களாலும் கவனிக்கப்பட்டார். இனி கமர்சியல் பக்கம் போவார்னு எதிர்பார்த்தப்போ, அழகர்சாமியின் குதிரைனு ஆர்ட் படம் பண்ணார். கோலிவுட்டே ஆச்சர்யத்துலதான் பார்த்தது. படம் முழுக்க எதார்த்தம் கொட்டிக் கொடுத்திருந்தார், சுசீந்திரன். அதுவரைக்கும் நகைச்சுவை நடிகரா இருந்த அப்புக்குட்டியை ஹீரோவாக்கினார். ஒரு குதிரைக்காரனை நாயகனா வச்சுக்கிட்டு கிராமத்து வாழ்க்கையை பக்குவத்தோட ஹேண்டில் பண்ணியிருந்தார். விமர்சகர்களால கொண்டாடப்பட்டு தேசிய விருதையும் வாங்கினார்.
அடுத்து விக்ரமை வைச்சு ராஜபாட்டைனு வேற ஒரு கதையை வாங்கி கமர்சியலா இறங்கி அடிச்சார். வணிகரீதியாவும், விமர்சன ரீதியாவும் படுதோல்வியையும், சுசீந்திரனுக்கு செட்பேக்கையும் கொடுத்தது. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் அப்படின்னு பின்னாட்கள்ல பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தார். இதுக்கப்புறம் சுதாரிச்சுக்கிட்ட சுசீந்திரன் அதிகமா பிரபலமில்லாத நடிகர்களை வச்சு அவரோட ப்ரொடக்ஷன்ல ஆதலால் காதல் செய்வீர் படத்தை தயாரிச்சு இயக்கினார். நகர்ப்புற இளைஞர்களோட பாலின ஈர்ப்பு அளவுக்கு மீறிப் போறதால அவங்களுக்கும் அவங்களோட குடும்பத்துக்கும் ஏற்படுற சிக்கல்களையும் சமூக அவலங்களையும் நேர்த்தியா படமாக்கியிருந்தார். இந்தப் படத்தை கடைசி 5 நிமிஷத்துக்கு முன்னால வரைக்கும் ஜாலியான மனநிலையில பார்க்க வச்சுட்டு, கடைசி 5 நிமிஷத்துல மனசுல பாரத்தை ஏத்தி வச்சிருப்பார், சுசீந்திரன். இந்த படத்திலும் சிசீந்திரனுக்கு நல்ல பெயர் கிடைச்சது, வியாபார ரீதியான வெற்றி. ஆனா, காதலுக்கு எதிரான மனநிலையில் படம் இருக்கு, சாதிய உணர்வாளர்களுக்கு ஆதரவான கருத்தை முன்வைக்குதுனு ஒரு சாரர் குற்றம் சொன்ன சம்பவமும் நடந்தது. அடுத்ததா மறுபடியும் ஒரு ஆக்ஷன் ஜானர் பண்ணலாம்னு முடிவு பண்ணி விஷாலைக் கூப்பிட்டு மதுரையில போய் பாண்டியநாடு படத்தை இயக்குறார். அதுவரைக்கும் விஷால் கொஞ்சம் செட்பேக்ல இருக்கார். அப்போ அந்த படம் ரிலீஸ் ஆகுது. 2013 தீபாவளிக்கு வெளியான ‘பாண்டியநாடு’ வழக்கமான பழிவாங்கல் கதைதான். ஆனா சுவாரஸ்யமான திரைக்கதை, எதார்த்தமான ஆக்ஷன் காட்சிகள், கதாபாத்திர வடிவமைப்பு, கச்சிதமான நடிகர்கள், மியூசிக், காமெடிகள்னு வணிக ரீதியாக வெற்றியும் அடைஞ்சது. நீண்டநாளைக்கு அப்புறமா பாரதிராஜாவை திரையில நடிகரா காட்டியிருந்ததும், சுசீந்திரன்தான். இப்போ விஷாலுக்கும், சுசீந்திரனுக்கும் ஆஃபர்கள் குவிஞ்சது.
திடீர்னு ஜீவா படத்தை இயக்கி தன் ஆஸ்தான ஹீரோவான விஷ்ணுவிஷாலை ஹீரோவாக்கினார். இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்ல இருந்து போற வீரர்கள்ல குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களோட ஆதிக்கம் அதிகமா இருக்கிறதைப் பத்தி அழுத்தமா பதிவு செஞ்ச படம். இது சுசீந்திரனோட துணிச்சலான இயக்கம்னும் சொல்லலாம். இவ்வளவு தீவிரமான விஷயங்களை பேசின இந்தப் படத்துல நகைச்சுவை, காதல், சென்டிமென்ட்னு கமர்சியல் விஷயங்களுக்கு குறைவைக்காம இந்தப்படம் உருவாகியிருந்தது. இந்தப்படத்தால எல்லா தரப்பும் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு பத்தியும், அதுக்குப் பின்னால இருக்கிற சாதி அரசியலையும் பேச ஆரம்பிச்சாங்க. மறுபடியும் விஷால்கூட பாயும்புலினு கமர்சியல் படம் பண்ணார். பரபரப்பும் சஸ்பென்ஸும் நிறைஞ்ச ஆக்ஷன் க்ரைம் திரில்லர்னாலும்கூட ரசிகர்கள் மத்தியில பெரிய அளவுல எடுபடலை. அடுத்து வில் அம்பு படத்தை தயாரிச்சார். இப்போ மறுபடியும் தன் நாயகன் விஷ்ணுவிஷாலை அழைக்கிறார். மாவீரன்கிட்டு படத்தை இயக்கினார் சுசீந்திரன். என்பதுகள்ல கிராமங்கள்ல இருந்த சாதிக் கொடுமைகளை மனசுல வச்சு அதை பதிவும் செய்திருந்தார். ஒடுக்கப்பட்ட சாதியினரோட அனைத்து உரிமைகளும் தடுக்கிறது மட்டும் இல்லாம, அவங்களுக்கான உரிமைகளை வங்கறப்போ வன்முறை வச்சு அதைக்காலி பண்ண துடிக்கிறதையும் அப்படியே பதிவாக்கியிருந்தார். ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஹீரோ வன்முறை, வீரம் தவிர்த்து கல்வியால முன்னேறத் துடிப்பவனா காட்டியிருந்தார். படம் அழுத்தமான படமாக உருவாகியிருந்தது.
Also Read – என்னடா கண்ணு கலங்குது.. இந்த சீன்ஸ்லாம் பார்த்தா அழுகை வராமல் இருக்குமா?!
‘மாவீரன் கிட்டு’வுக்குப் பிறகு சுசீந்திரன் தயாரிச்ச ‘வில் அம்பு, கதை எழுதுன ‘வெண்ணிலா கபடிகுழு 2’, இயக்கின ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘ஜீனியஸ்’, ‘கென்னடி கிளப்’, ‘சாம்பியன்’, ஈஸ்வரன், வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே படங்கள எந்த வகையிலும் கவனம் ஈர்க்கலை. ஆனாலும், சுசீந்திரனோட திறமையை யாருமே குறைச்சு மதிப்பிடலை. ஈஸ்வரன் மட்டும் வணிக ரீதியிலான வெற்றியடைஞ்சது. இதுபோக உதவி இயக்குநர் காலக்கட்டத்துலயே நாம், தீபாவளி படங்கள்ல தலை காட்டினார். அதுக்குப் பின்னால சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்துல முக்கியமான ரோல்ல நடிச்சிருந்தார். கொஞ்சகாலம் செட்பேக்ல இருக்கிறது உண்மைதான். ஆனா ஒரு படைப்பாளியா இன்னும் சுசீந்திரனுக்கு சரியான கதை அமையல. கிடைச்சா மறுபடியும் தன்னோட திறமையை நிரூபிப்பார். இப்போ சத்தமே இல்லாம வள்ளிமயில் படம் இயக்கி முடிச்சிருக்கார். அதுல விஜய் ஆண்டனியும், சுனிலும் நடிச்சிருக்காங்க. நிச்சயமா இந்த படம் சுசீந்திரனுக்கு ஒரு கம்பேக்கா இருக்கும்னு நம்பலாம்.
இயக்குநரா தன்னுடைய 12 ஆண்டு திரைப் பயணத்தில் மக்கள் ரசிக்கிற மாதிரியான நிரம்பிய கமர்சியல் படங்கள், சமூக அவலங்களைப் பேசும் கதைகள்னு இரண்டையும் அடுத்தடுத்து கொடுத்துக்கிட்டே வந்தார். இவரோட திரைப்பயணத்தைப் பார்த்தா ஒரு விஷயம் நல்லா தெரியும். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்லனு ரெண்டு வெற்றிக்குப் பின்னால அழகர்சாமியின் குதிரைனு படம் பண்றார். பாண்டியநாடு ஹிட்டுக்குப் பின்னால ஜீவானு ஒரு சமூக அக்கறை கொண்ட படம், அதுக்கப்புறம் பாயும்புலினு கமர்சியல் படத்துக்கு பின்னால மாவீரன்கிட்டுனு டிரை பண்றார். இவரோட படங்களை எடுத்துப்பார்த்தா எதுவுமே ஒரு ஜானர்லயோ, ஒரே சாயலாவோ இருக்காது. எல்லாமே வித்தியாசமாத்தான் இருக்கும். இதுதான் சுசீந்திரன். சமூக அக்கறை கொண்ட படைப்பை கொண்டுவர வேண்டும் என நினைக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர். மாவீரன் கிட்டு படத்துக்கு அதிகமான எதிர்ப்புகள் வந்தபோதும், அப்படித்தான் படம் எடுப்பேன்னு தைரியமா படம் இயக்கினவர்.
இயக்குநர் சுசீந்திரனைப் பொறுத்தவரைக்கும் ஒரு பாலை மிஸ் பண்ணிட்டோம்னா, அதை நினைச்சு வருத்தப்படக் கூடாது. அடுத்தபால் வரப்போகுது அதை எப்படி அடிக்கலாம்னு பார்க்கணும். அதுக்கு தயாராகணும்..இதுதான் பாலிசி. அதே மாதிரி காமெடிக்காக தனியான டிராக்கா போககூடாதுங்குறதுலயும் இப்போ வரைக்கும் ஃபாலோ பண்றார். இதுபோக தான் பார்த்து இன்ஸ்பையர் ஆகுற விஷயங்களை வச்சும் கதை அமைப்பார். வெண்ணிலா கபடிக்குழு படத்துல அப்பாவுக்கு நடந்த விஷயங்கள், அவர் சொன்ன கதைகளை வச்சு இயக்கினார். நான் மகான் அல்ல படத்துல அந்த லவ் போர்ஷன் எல்லாமே சுசீந்திரன் வாழ்க்கையில அவரோட லவ் காலக்கட்டத்துல நடந்த சம்பவங்களை இன்ஸ்பையராகி அந்த சீன்ஸ்லாம் எடுத்திருந்தார். அவருக்கு பின்னால அவரைப் பார்த்துக்குறது எல்லாமே அவரோட மனைவிதான். சொந்தக்கார பெண்ணை காதலிச்சு திருமணம் செய்துகிட்டவர். ரெண்டு மகன்களோட குடும்ப வாழ்க்கையை சிறப்பா வாழ்ந்துக்கிட்டிருக்கார், மனுஷன்.
எனக்கு சுசீந்திரன் இயக்கின படங்கள்ல பிடிச்ச படம் வெண்ணிலா கபடிக்குழுவும், ஜீவா படமும்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.