மணி ரத்னம்

இளையராஜா பாடல்கள்.. பென்சில் ஸ்கிரிப்ட் – இயக்குநர் மணிரத்னம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

* மணிரத்னம் ஒரு தீவிர நாத்திகர். அவர் தனது எந்தப் படத் தொடக்கத்திற்கும் பூஜை போட்டதில்லை. முடிவடையும்போது பூசணிக்காய் உடைத்ததும் இல்லை. தினமும் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பு கேமராவுக்கு பூஜை போடுவது தென்னிந்திய திரைத்துறையில் வழக்கம். அந்த சென்டிமென்டும் மணிரத்னத்துக்குக் கிடையாது.

* அலுவலகத்துக்குள் தான் வரும்போது, உதவி இயக்குநர்களோ மற்ற பணியாளர்களோ தன்னைப் பார்த்ததும் எழுந்து நின்றால் மணிரத்னத்துக்கு சுத்தமாகப் பிடிக்காது.  

* மணிரத்னத்தின் அலுவலகமானது, அது இருக்கும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கிறது. லிஃப்ட் இல்லாத அந்த கட்டிடத்தில் தினந்தோறும் எத்தனை முறையென்றாலும் சளைக்காமல் படியேறிதான் சென்று வருவார் மணிரத்னம்.

* கலைஞர்களுக்கு, குறிப்பாக இயக்குநர்களுக்கு உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பார் மணிரத்னம். ஷூட்டிங் என்பது போர்க்களம் என்றும் அங்கு நாமெல்லாம் போர் வீரர்கள் என்றும் அடிக்கடி சொல்வார்.

* இளைஞர்களிடம் உரையாடுவதுதான் மணிரத்னத்தின் மிகப்பெரும் பொழுதுபோக்கு. அவர்களுடன் நேரம் செலவிடும்போது எந்தவித ஈகோவுமின்றி அந்த வயதினரைப்போல வெகு சகஜமாக இருப்பார் மணிரத்னம்.

* மணிரத்னம் எப்போதும் தனது கைபட பென்சிலில்தான் ஸ்கிரிப்ட் எழுதுவார். அவரது ஆபிஸ் டேபிளில் எப்போதும் 10 பென்சில்கள் கூர் சிவி தயாராக இருக்கவேண்டும் என்பது அவரது உத்தரவு.

மணிரத்னம்
மணிரத்னம்

* பொதுவாக படப்பிடிப்பில் மணிரத்னம் நடித்துக்காட்டமாட்டார் என சொல்வார்கள். ஆனால் அவருக்கு நடித்துக்காட்டத் தெரியும். அதைச் செய்யவும் செய்வார். ஆனால், அது அவரது பிரம்மாஸ்திரம். அந்த அளவுக்கு அவர் எதிர்பார்ப்பதை புரிந்துகொள்ள முடியாத நடிகர்கள் அமைந்துவிட்டால் மட்டுமே நடித்துக்காட்டுவார். இது மிக அரிதாகத்தான் அவரது ஷூட்டிங்கில் நடக்கும்.

* ஏர்போர்ட் பிக்கப்புகளுக்கு தன்னை பிக்கப் செய்ய வேண்டிய கார் வரவில்லையென்றாலோ தாமதமாகிவிட்டாலோ மணிரத்னம் கோபித்துக்கொள்ளமாட்டார்.  ஒரு ஆட்டோ பிடித்து போக வேண்டிய இடத்துக்கு போய்விடுவார். பிறகு அதைப்பற்றி பேசிக்கொள்ளவும் மாட்டார்.

* இளையராஜாவின் பாடலைக் கேட்டிராத ஒரு நாள் மணிரத்னம் வாழ்வில் இருக்கமுடியாது. ஒருநாளில் குறைந்தது ஒரு இளையராஜா பாடலாவது கேட்டுவிடுவார். அந்த அளவுக்கு மணிரத்னத்துக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும்.

* ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேக் டைம் தவிர்த்த மற்ற நேரங்களில் தண்ணீரைத் தவிர்த்து வேறு எதையுமே சாப்பிடமாட்டார் மணிரத்னம்.

* மணிரத்னத்துக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன். அவரது ‘முள்ளும் மலரும்’ படம் மணிரத்னத்துக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகிறது. இயக்குநராவதற்கு முன்பு மகேந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றவும் முயன்றிருக்கிறார் மணிரத்னம்.

* ஷாரூக் கான் நடிப்பில்தான் ‘அலைபாயுதே’ படத்தின் கதை இந்தியில் படமாக இருந்தது. ஆனால் அப்போதிருந்த வெர்சன் மணிரத்னத்துக்கு திருப்தி அளிக்காததால் வேறொரு கதையில் ஷாரூக் கானை நடிக்கவைத்தார். அதுதான் ‘உயிரே’.

* பொதுவாக இயக்குநர்கள் குழந்தைகளை வைத்து படமாக்குவது மிகவும் சிரமம் எனக் குறிப்பிடுவார்கள். ஆனால் மணிரத்னமோ குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்றால் அன்று வழக்கத்தைவிட உற்சாகமாக இருப்பார்.

Also Read : முதல்முறையாக இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியில் தோனி… கொண்டாடும் ரசிகர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top