தேவர் மகன்

ஸ்க்ரீன் ப்ளே சாஃப்ட்வேரில் தேவர் மகன்… ஒரு பாட்டில் நிகழ்ந்த தவறு! #ThevarMaganUnknownFacts

‘தேவர் மகன்’ திரைப்படம் கமல்ஹாசன் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். பரதன் அந்த திரைப்படத்தை எவ்வளவு அருமையாக இயக்கியிருந்தார் என்பது நமக்குத் தெரியும். ‘தேவர் மகன்’ எனப் பெயரில் உள்ளது போலவே அந்த சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கிராமத்துக் கதையைக் கமல் உருவாக்கினார். சிவாஜி, கமல், நாசர், வடிவேலு, ரேவத என நடிகர் பட்டாளமே அசத்த, இளையராஜா இசையிலும், பி.சி ஶ்ரீராம் ஒளிப்பதிவிலும் படத்தை வேறு ஒரு கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. இப்படி படத்தை பற்றிச் சொல்ல பல காரணங்கள் உண்டு. அதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

மறுத்த சிவாஜியும்… கமல் திட்டமும்!

நடிகர் கமல், இந்தத் திரைப்படத்தில் செய்த மிக புத்திசாலித்தனமான செயல் என்றால், அது சிவாஜி கணேசனை தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததுதான். இதற்காக கமல், சிவாஜி கணேசனை அணுகியபோது சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடலில் ஃபேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தியிருந்தார். ‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க கமல் அணுகியதும் தன்னுடைய உடல்நிலையைக் காரணங்காட்டி ‘பசங்க இனிமே நடிக்க வேணாம்னு சொல்றாங்க’ என சிவாஜி மறுத்துவிடுகிறார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருந்தார். நீங்கள்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பீர்கள் என சிவாஜியிடம் எடுத்துக்கூறிய கமல், அமெரிக்காவில் எடுத்துவரும் சிகிச்சை முடியும்வரை தான் காத்திருப்பதாகக் கூறினார். அதே போல, சிவாஜி கணேசன் சிகிச்சையை முடித்து திரும்பிய பிறகே ‘தேவர் மகன்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. கமல் ஏன் அவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதற்கு ‘தேவர் மகன்’ படத்தைப் பார்க்கும்போது நமக்கும் தெரியும்.

தேவர் மகன் பில்லர் சிவாஜி!

வெளிநாட்டில் படித்துவிட்டு கமல் சொந்த கிராமத்திற்கு வருவார். சிவாஜி கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருப்பார். கமலை சிவாஜி உட்காரச் சொல்லுவார். கமல் உட்கார மறுத்துவிடுவார். பொதுவாக கிராமப்புறங்களில் மதிப்பு, மரியாதை காரணமாக பெரியவர்கள் முன் சிறியவர்கள் உட்காரமாட்டார்கள். நீங்கள் யோசித்துப்பாருங்கள்… அந்த இடத்தில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக வேறொரு நடிகர் இருந்து கமல் இவ்வாறு உட்கார மறுத்திருந்தால் ரசிகர்களே அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த இடத்தில் சிவாஜி கணேசன் இருந்ததால்தான் அந்தக் காட்சி பொருத்தமாகவும் மண் வாசனையுடனும் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘தேவர் மகன்’ திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்கு காரணம் சிவாஜி கணேசனின் நடிப்பும், அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன்தான் நடிக்க வேண்டுமென கமல் தீர்மானமாக எடுத்த முடிவும்தான்”.

ஸ்கிரீன்பிளே சாப்ட்வேர்!

அமெரிக்காவில் மூவி மேஜிக் என்ற ஸ்கிரீன் பிளே சாப்ட்வேர் அறிமுகமாகியிருந்தது. அதை வைத்து இந்த படத்தின் ஸ்கிரீன் பிளே மொத்தமாக 7 நாட்களில் கமல்ஹாசன் எழுதி முடித்தார். படம் பாதி ஷூட்டிங்கின்போது ஸ்கிரீன்பிளேவில் ஏற்பட்ட குழப்பத்தால் நின்றுபோனது. அப்போது ஸ்கிரீன்பிளே ரைட்டர் கலைஞானம் உள்ளே வந்து ஒரு கோவில், ரெண்டு பூட்டு என்பதைக் கதையில் சேர்க்கச் சொல்ல, அது கமலுக்கும் பிடித்துப்போக படம் மீண்டும் டேக்ஆப் ஆகியிருக்கிறது.

மாற்றப்பட்ட கதாபாத்திரங்களும், டைட்டிலும்!

முதல்முதலாக சிவாஜி ரோலுக்கு விஜயகுமார், எஸ்.எஸ் ராஜேந்திரனைத்தான் முடிவு செய்திருந்தது படக்குழு. கமலுக்கு முழு திருப்தி கொடுக்காததால், இறுதியில் சிவாஜி கணேசன் உள்ளே வந்தார். சிவாஜி கணேசனின் காட்சிகள் மொத்தம் 7 நாட்களில் படமாக்கப்பட்டது. அதேபோல ரேவதி ரோலில் முதலில் கமிட்டானவர் மீனா. சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் மீனா சிறிய பெண்ணாக இருந்ததால், அவரை நீக்கிவிட்டு ரேவதியை உள்ளே கொண்டு வந்தது படக்குழு. படத்துக்கு முதலில் நம்மவர் என டைட்டில் வைக்க ஆலோசனை சொன்னார், கமல். ஆனால் கதை வீரியமாக இருக்கிறது, அதனால் வேறு டைட்டிலை வைக்கலாம் என படக்குழு தெரிவிக்கவே இறுதியில் ‘தேவர்மகன்’ என டைட்டில் வைக்கப்பட்டது. இந்த படம் கன்னடப்படமான காடு, காட்பாதர் படத்தின் இன்ஸ்பிரேஷன் என கமலே தெரிவித்திருக்கிறார்.

படம் ஏற்படுத்திய சர்ச்சைகள்!

இந்தபடம் வெளியான சில நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வன்முறையும், தீண்டாமையும் நிகழ்த்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. என்னதான் வன்முறையை வேண்டாம் என்று க்ளைமேக்சில் மெசேஜ் சொல்லியிருந்தாலும், படம் முழுக்க குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தோட வன்முறைக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவும், பெருமை பேசுவதாகவும் இன்றைக்கு வரைக்கும் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. இதைப் பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் தேவர் மகன் கருத்தை விமர்சித்து கமலுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் இந்த படத்துக்குப் பின் வேட்டிகள் மடித்து அதிகார ஆணவத்தோடு கட்டப்பட்ட்டு மீசைகள் முறுக்கபட்டன. வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டி, சிறுவர்கள்கூட வலுக்கட்டாயமாக பாட வைக்கப்பட்டனர். அன்றைய காலக்கட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்ட சம்பவமும் நடந்தேறியது. விழாக்களில் ஒலித்த அந்த பாடல் கிராமங்களின் ஒற்றுமையை ஆட்டம் காண வைத்த சம்பவங்களும் நடந்தன' என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்ச்சை குறித்து கமல் பதில்!

இந்த சர்ச்சைகள் குறித்து ஒரு பேட்டியில் “அந்த விபத்துக்கு நானும், இளையராஜாவும், இப்போது இல்லையென்றாலும், வாலி அவர்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால், அந்தப் பாடலை உருவாக்கியபோது எங்கள் மனதில் அதுபோன்ற எந்த எண்ணமும் இல்லை. எதையும் நினைக்காமல் செய்துவிட்டோம். வியாபார யுக்தியோ, ஒரு இனத்தை வாழ்த்திப்பாட வேண்டும் என்பதோ எங்கள் நோக்கமாக அப்போது இல்லை. ஒரு ஹீரோவை, கதையின் நாயகனை வாழ்த்திப்பாடுவதற்காக இயற்றப்பட்ட பாடல்தான் அது. ப்போது மறுபடியும் ‘தேவர் மகன்’ எடுத்தால்கூட அதற்கு ‘தேவர் மகன்’ எனப் பெயர்வைக்க மாட்டேன். ஆனால், அந்தக் காலத்தில் அது தேவைப்பட்டது.”

இன்றைக்கும் ஸ்கிரீன்பிளே கற்றுக் கொள்ள பாடமாக இருக்கும் படமும் தேவர் மகன்தான். ஆனால், தேவர் மகனில் சாதிய பெருமைகள் பேசியதையும் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

Also Read : ரோல்மாடல் விஜய் சேதுபதி… எல்லா ஆண்களுக்கும் தொப்பை அழகுதான்!

1 thought on “ஸ்க்ரீன் ப்ளே சாஃப்ட்வேரில் தேவர் மகன்… ஒரு பாட்டில் நிகழ்ந்த தவறு! #ThevarMaganUnknownFacts”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top