பிரதாப் போத்தன் இயக்கத்தின் நெப்போலியன், சரண்யா உள்ளிட்டோர் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான படம் `சீவலப்பேரி பாண்டி’.
பத்திரிகையாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் பிரபல வார இதழில் எழுதிய தொடர் கதையை அதேபெயரில் படமாக எடுத்தனர். இந்தப் படத்துக்கு வசன உதவியையும் சௌபா எழுதினார். ஆதித்யன் இசையில், கிழக்கு செவக்கையிலே’,
ஒயிலா பாடும் பாட்டுல..’, `திருநெல்வேலி சீமையில..’ போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. நடிகர் நெப்போலியனின் கரியரில் மிகவும் முக்கியமான படமாக மாறிய இந்தப் படம், சீவலப்பேரி கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்துக்கு திரைக்கதை எழுதிய கே.ராஜேஷ்வர் திருநெல்வேலிக்குச் சென்று பாண்டி குறித்து அப்பகுதி மக்களிடம் பல்வேறு தகவல்களை நேரில் கேட்டறிந்த பின்னரே, கதையை எழுதியிருக்கிறார்.
சீவலப்பேரி பாண்டி
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கிராமத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை கொலைவழக்கில் முக்கிய குற்றவாளிகளான சீவலப்பேரி பாண்டி, முருகன், முண்டத் தேவர் ஆகிய மூவரும் நண்பர்கள். கிராமத் தலைவரிடம் மெய்க்காப்பாளராகப் பணிபுரிந்த சீவலப்பேரி பாண்டி, கொலை வழக்கில் முதல் குற்றவாளி. கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, தனது குடும்பத்தினருக்கு நண்பர்கள் உதவவில்லை என்ற ஆத்திரத்தில் சிறையில் இருந்து தப்பிய பாண்டி, அவர்களைப் பழிவாங்கியிருக்கிறார். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுத்துவந்த இவர் அப்பகுதியின் ராபின்ஹுட்டாகவே கொண்டாடப்பட்டிருக்கிறார்.
சிறையிலிருந்து தப்பிய பாண்டி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் வரிசைகட்ட ஒருகட்டத்தில் அவரை என்கவுண்டர் செய்ய போலீஸ் முடிவெடுக்கிறது. போலீஸின் தொடர்ச்சியான தேடுதல் வேட்டையில் 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீவலப்பேரி பாண்டி என்கவுண்டர் செய்யப்பட்டார். போலீஸாரிடம் சரணடைய முடிவெடுத்த பாண்டி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டால், மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் அவருக்கு தண்டனை பெற்றுத் தருவது கடினம் என்று போலீஸார் கருதியதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாண்டியின் பெயரையும், அவரது மனைவி வேலம்மாள் பெயரையும் சூட்டி மகிழ்கிறார்கள்.
பத்திரிகையாளரின் சோக முடிவு!
சீவலப்பேரி பாண்டி கேரக்டர் பிரபலமாகக் காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் சௌபா. இவர் எழுதிய தொடர் கதையே பின்னாளில் படமாக எடுக்கப்பட முக்கியமான காரணம். உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவது குறித்தும் விரிவாக இவர் பதிவு செய்ததாலேயே, தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டுவந்தது. கடந்த 2018-ல் மகனைக் கொலை செய்து எரித்ததாகக் கைது செய்யப்பட்ட சௌபா, உடல்நலக் குறைவால் அந்த ஆண்டு ஜூன் 12-ல் உயிரிழந்தார். போதைக்கு அடிமையான மகன் தன்னை அடித்துத் தொந்தரவு செய்ததாகவும் திருப்பித் தாக்கியதில் உயிரிழந்ததாகவும் போலீஸ் விசாரணையில் சௌபா சொல்லியிருந்தார்.
Also Read – 25 ஆண்டுகள்… 23 படங்கள்… ஒன்பதே இயக்குநர்கள்..! ரஜினியின் safe game ரகசியம்