சென்னை தலைமை செயலகத்தில் ஊடகவியலாளர்கள் வாகன நிறுத்தம் அருகே இருந்த பெரிய மரம் விழுந்ததில் பெண் தலைமைக் காவலர் கவிதா என்பவர் உயிரிழந்தார். என்ன நடந்தது?
வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில் கிண்டியை அடுத்த சின்னமலையில் சாலை விபத்தில் சிக்கி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் 31 வயதான முகமது யூனுஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் இருந்த பள்ளத்தில் நீர் நிரம்பியிருந்த நிலையில், அதனால் தடுமாறிய முகமது யூனுஸ் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் மாட்டினார். இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைமைச் செயலக விபத்து – பெண் காவலர் உயிரிழப்பு
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தின் ஊடகவியலாளர்கள் வாகன நிறுத்தம் அருகே இருந்த பெரிய மரம் கனமழையில் வேரோடு சாய்ந்தது. காலை 9 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் பெண் தலைமைக் காவலர் கவிதா (40) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். முத்தியால்பேட்டை போக்குவரத்துக் காவல்நிலையத்தில் அவர் பணியாற்றி வந்திருக்கிறார். தலைமைச் செயலகத்தில் அவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் சில காவலர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் காவலர் ரேவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். சம்பவம் நடந்த பகுதியில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் பெரிய மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.