சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு தனி இடம் பிடித்து அமர்ந்துவிட்டார். அவரைப்போலவே சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து நம்பர் 1 காமெடியனாக கோலோச்சிக்கொண்டிருந்த சந்தானம், சிவகார்த்திகேயனைப் பார்த்து தானும் ஹீரோ ஆவதென முடிவெடுத்து அதற்கான ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார். ஆனால் இதில் சிவகார்த்திகேயனுக்கு அடித்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் ஏன் சந்தானத்திற்கு அமைய மறுக்கிறது.. காரணங்கள் என்னென்ன..? பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கும் கதைகள்
என்னதான் சந்தானம் காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிவிட்டாலும் அவருக்கு உள்ளுக்குள் என்னவோ இன்னும் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ளாமல்போய்விடுவார்களோ என்ற சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே சந்தானம் காமெடியை பிராதானமாகக் கொண்ட படங்களிலேயே தொடர்ந்து நடித்துவருகிறார். இப்படி இவர் தொடர்ந்து நடிப்பதாலேயே அது ஒருவிதமான பழக்கத்தை மக்களுக்கு தந்துவிடுகிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போது சந்தானம் ஒரு முழு கதைநாயகனாக நடிக்கிறாரோ அப்போது முழு வெற்றியைப் பெற ஆரம்பிப்பார்.
வெத்து ஹீரோயிஸம்
கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் ஒரு வித தயக்கத்துடனே அணுகும் சந்தானம், படத்தில் மட்டும் ஓப்பனிங் ஸாங், மாஸ் ஃபைட் என திடீர் தீடீரென ஹீரோயிஸ வேலைகளில் ஈடுபடுவார். இதனால் ஆடியன்ஸுக்கு அவரை ஹீரோவாக பார்ப்பதா, காமெடியனாக பார்ப்பதா என்ற குழப்பமே இன்னும் நீடித்துவருகிறது. இதுவே சிவகார்த்திகேயனின் வெற்றிப் படங்களை எடுத்துக்கொண்டால் அதில் எதிலுமே தேவையற்ற ஹீரோயிஸக் காட்சிகள் எங்குமே இருக்காது என்பதைப் பார்க்கலாம்.
அழுத்தமில்லாத திரைக்கதைகள்
சந்தானத்தின் எல்லா படங்களிலுமே அவரை மையப்படுத்தியே திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் . அவரைத் தவிர்த்து அவரது படத்தில் வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் ஒரு அழுத்தம் இருக்காது. அவரது பாத்திரமே மேலோட்டமாக படைக்கப்பட்டிருக்கும்போது எங்கிருந்து மற்ற கதாபாத்திரங்களுக்கும் உயிர் தருவதுபோல திரைக்கதை எழுதுவது? அதுவே சிவகார்த்திகேயனின் படங்களில் அவரைத் தவிர்த்து நம்மால் எத்தனையோ வலுவானக் கதாப்பாத்திரங்களைக் குறிப்பிட முடியும். ‘எதிர்நீச்சல்’ நந்திதா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சத்யராஜ், ‘ரஜினிமுருகன்’ ராஜ்கிரண், ‘ஹீரோ’ அர்ஜூன், ‘நம்மவீட்டு பிள்ளை’ ஐஸ்வர்யா ராஜேஷ் என பல அழுத்தமான கதாப்பாத்திரங்களை குறிப்பிடமுடியும். மேலும் அந்த பாத்திரங்கள் திரைக்கதையோடு அழகாகப் பின்னப்பட்டிருக்கும். இவ்வகை திரைக்கதைகள் சந்தானத்திற்கு இன்னும் அமையவில்லை அல்லது அமைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தம்.
பலவீனமான டெக்னிக்கல் டீம்
இதுவரை வெளியான சந்தானத்தின் எல்லா படங்களிலுமே மிகவும் பலவீனமான டெக்னிக்கல் டீம்தான் பணியாற்றியிருக்கிறது. சமீபத்தில் வந்த ‘டிக்கிலோனா’ தவிர்த்த அவரது எல்லா படங்களிலுமே ஒளிப்பதிவு, இசை என எல்லாமே மிகவும் அமெச்சூராகத்தான் இருக்கும். இதனாலேயே சந்தானத்தின் படங்களை பெரிய படங்களின் லிஸ்டில் சேர்க்கமுடிவதில்லை. இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயனின் படங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இதில் பட்ஜெட்டையெல்லாம் காரணம் சொல்ல முடியாது. ஜீரோ பட்ஜெட்டிலேயே தங்களது உயிரைக் கொடுத்து வேலை செய்ய எத்தனையோ புதுமுக திறமையாளர்கள் கோலிவுட்டில் தயாராக இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்திக்கொள்ளவேண்டியது படக்குழுவின் கையில்.
குழந்தைகளையும் முதியவர்களையும் கவராதது
சந்தானம் காமெடியானாக இருந்தபோதே அவர் வடிவேலுவைப்போல குழந்தைகளையும் முதியவர்களையும் கவர்ந்ததில்லை. அவரது காமெடி எப்போதும் இளைஞர்களுக்குத்தான் பிடிக்கும்படியும் புரியும்படியும் இருந்தது. அதே ரூட்டில்தான் இப்போது ஹீரோவான பிறகும் சந்தானம் போவது மிகப்பெரும் மைனஸ்.
பாடல்கள்
‘ஏ-1’ பட ‘மாலை நேர மல்லிப்பூ’, ‘டிக்கிலோனா’ பட ‘பேர் வெச்சாலும்’ ரீமிக்ஸைத் தவிர்த்து சந்தானத்தின் எந்த படத்திலுமே பாடல்கள் கேட்கும்படி இருந்ததில்லை. நல்ல பாடல்கள்தான் ஒருவரை மக்கள் மத்தியில் ஹீரோவாக கொண்டுசேர்க்கும். சமீபத்தில் ‘குட்டி பட்டாஸ்’ என்ற ஒரேயொரு பாடல் மூலம் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின், அந்த நிகழ்ச்சியை பார்த்தேயிருந்திடாத மக்கள்வரை ஹீரோவாக ரீச் ஆகியிருக்கிறார். சந்தானம் இந்த யுத்தியை இன்னும் பயன்படுத்தவில்லை.
இதுபோல இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. ஒருவர் சக்ஸஸ்ஃபுல் ஹீரோவாக ஜொலிப்பதற்கு அதையெல்லாம் எப்போது சந்தானம் கடைபிடிக்க ஆரம்ப்பிக்கிறாரோ அப்போது அவரும் ஒரு முன்னணி ஹீரோவாக நிச்சயம் ஜொலிப்பார்.
Also Read – Sivaji Ganesan: `நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் ஹீரோவான தருணம்!