கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சூழலில், பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்க்கொள்ளும் அபாயம் சிறுவர் முதல் வயதானவர்கள் வரை இருப்பதாக எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
கொரோனா ஊரடங்கில் பாஸிட்டிவாக இருப்பது எப்படி?
ரொட்டீன் முக்கியம் பாஸ்
தினசரி அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரா நீங்கள்… ஆம் என்றால், ஊரடங்கிலும் அந்த ரொட்டீனை மிஸ் பண்ணாதீங்க. ஊரடங்குதானே சீக்கிரம் எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணாமல் உங்கள் வழக்கமான பாணியில் எழுந்து விடுங்கள். தினசரி நீங்கள் செய்யப்போகும் பணிகளைப் பட்டியலிட்டு, அதை ரொட்டீனாகச் செய்து வருவது உங்கள் மனதை லேசாக வைத்திருக்க உதவும். இதனால், நெகட்டிவிட்டி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
உடலே கோயில்
ஊரடங்கு நேரத்தில் உடல் பராமரிப்பில் கூடுதல் அக்கறையோடு இருங்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் முடு ஈடுபாடு காட்டுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சி, குளிர்ந்த நீரில் குளியல் என உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முனைப்பு எடுங்கள். இதுபோன்ற அசாதாரண சூழலில் ஃபிட்டாக இருப்பது ரொம்பவே முக்கியம் என்கிறார்கள். சரியான டைமுக்கு உணவு எடுத்துக் கொள்வதும், நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதும் கைமேல் பலன் கொடுக்கும்.
உடலைப் போலவே நமது மூளையும் ரொம்ப முக்கியமானது. இதுபோன்ற நேரங்களில் உங்களை நீங்கள் பிஸியாக வைத்துக் கொள்வது, பாஸிட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள உதவும்.
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
சில சமயங்களில் நெகட்டிவ் எண்ணங்கள் வந்து போவது இயல்புதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நேரமும் மோட்டிவேட்டடாக இருப்பது என்பது இயலாத காரியம். சோகத்தை நாம் கடக்காவிட்டால் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போகலாம். நாம் பிஸியாக இருக்கிறோம் என்பதைத் தாண்டு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்பதே முக்கியம். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செயலில் ஈடுபடுங்கள். சிலருக்கு மரம் வளர்ப்பது, சிலருக்கு கேம் விளையாடுவது, சிலருக்கு விருப்பமானவர்களோடு மனம்விட்டு பேசுவது மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுபோன்ற தருணங்கள் தினசரி உங்கள் வாழ்வில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சரியான உணவு, உடற்பயிற்சி, போதுமான அளவு உணவு – இவை மூன்றும் தினசரி உங்களுக்கு முக்கியமானவை.
போதும் என்ற மனது
ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சிக் கடை என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், இந்த ஊரடங்கு நமக்குக் கற்றுக்கொடுக்கும் முக்கியமான பாடம், எது முக்கியம்... எது முக்கியமில்லாதது’ என்பதே என்று சொல்கிறார்கள் அறிஞர்கள். அந்தவகையில், உங்களின் தேவைகளை அத்தியாவசியம் என்ற அளவுக்குக் குறைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள். தேவையில்லாத ஏமாற்றத்தைத் தவிர்க்க இது உதவும்.
போதும் என்ற மனதே பொன் செய்யும் மருந்து’ என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
ஆஃப்லைன் வாழ்க்கை அவசியம்
இன்றைய வொர்க் நேச்சரால் ஆன்லைன் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழல் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற அசாதாரண சூழலில் வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆஃப்லைன் வாழ்வை நாம் ஆராதிக்கத் தொடங்குங்கள். குழந்தைகளோடு விளையாடுங்கள், லைஃப் பாட்னரோடு மனது விட்டுப் பேசுங்கள்… இப்படி ஆஃப்லைன் ஆக்டிவிட்டியை அதிகப்படுத்துவது உங்களுக்குள் இருக்கும் பாஸிட்டிவிட்டியை பூஸ்ட் செய்யும். உடற்பயிற்சி, மாடியில் நடைபயிற்சி என உங்களை நீங்களே எனர்ஜிட்டிக்காக வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்
டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த நேரத்தில் நேரம் என்பது மிகவும் மதிப்பிற்குரிய பொருளாகிவிட்டது. தினசரி வொர்க் லோடைத் தாண்டி புது விஷயங்களில் நேரத்தை செலவிடுவது கடினமான காரியமாகிவிட்டது. ஊரடங்கால் நமக்கு நிறையவே நேரம் கிடைத்திருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் பெயிண்டிங், புதிய மொழி, விளையாட்டு, புது டெக்னிக் என புதிதாக எதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். ஊரடங்கை பாஸிட்டிவிட்டியோடு கடக்க அது உதவும்.
Also Read – தமிழகத்தில் மே 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு… எதற்கெல்லாம் அனுமதி?