ஒன்டே ட்ரிப்புக்கு ஏற்ற கன்னியாகுமரி – இந்த இடங்களுக்கெல்லாம் விசிட் அடிக்க மறந்துடாதீங்க!

தமிழ்நாட்டுல இருக்குற ரொம்பவே அழகான சுற்றுலாத்தளங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. கடல், காடு, மலை, வயல்னு ஐந்திணைகள்ல பாலையைத் தவிர மீதி நான்கு திணைகளும் கன்னியாகுமரில இருக்கு. கேரளாவைக் கடவுளின் தேசம்னு சொல்லுவாங்க. அந்த வகையில் பார்த்தா, ‘தமிழ்நாட்டுல இருக்குற கடவுளின் தேசம், கன்னியாகுமரி’ அப்டினு சொல்லலாம். அந்தக் கன்னியாகுமரில நீங்க அவசியம் பார்க்க வேண்டிய சில இடங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கலாம். வாங்க!

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரில ஏகப்பட்ட அழகான கடற்கரைகள் இருக்கு. ஆனால், அதுல நீங்க நிச்சயம் பார்க்க வேண்டியது கன்னியாகுமரி கடற்கரைதான். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி அருங்காட்சியகம்னு பிரம்மாண்டமான சில விஷயங்களும், வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்னு முக்கடல்களும் சங்கமிக்கிற அழகான அதிசயங்களும், சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற ரம்மியமான காட்சிகளும் இங்கேதான் நிரம்பியிருக்கும். இன்னொரு ஸ்பெஷல் என்னனா, அந்தக் கடல்கள் ஒண்ணுக்கொண்ணு கலக்காமல் ஆனால், சங்கமிக்கிறதை நம்மளால தெளிவா பார்க்க முடியும். மூன்று கடல்களும் வெவ்வேறு கலர்ல இருக்கும். காலநிலை மாற்றத்துக்கு ஏற்றமாறி அந்தக் கடல்களின் நிறங்களும் மாறும்.

கடற்கரை

ஆன்மீக தலங்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயம், நாகர்கோவில் நாகராஜா கோயில், குமாரகோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவிதாங்கோடு தேவாலயம், சவேரியார் தேவாலயம், கன்னியாகுமரி தேவாலயம், ராமாபுரம் தேவாலயம், ராஜாக்காமங்கலம் தேவாலயம், திருவிதாங்கோடு சின்னப்பள்ளி, தக்கலை தர்கா, திட்டுவிளை மசூதி, மேக்காமண்டபம் மசூதி இப்படி ஏகப்பட்ட ரொம்பவே பிரபலமான ஆன்மீக தலங்கள் கன்னியாக்குமரி முழுவதும் நிரம்பியிருக்கு. தீவிரமான ஆன்மீகவாதிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தாலும் அவங்க நிச்சயம் அதிருப்தி அடையமாட்டாங்க.

தேவாலயம்
தேவாலயம்

மாத்தூர் தொட்டிபாலம்

கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களுள் மாத்தூர் தொட்டி பாலமும் ஒன்று. தெற்காசியாவில் மிகப்பெரிய பாலமாகவும் இது விளங்குகிறது. இரு மலைகளுக்கு இடையே தொட்டில் போன்ற அமைப்பை உடையதால் இது தொட்டிப்பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த தொட்டி பாலத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய திசை வரைக்கும் ஆறும், பச்சை பசேல் என இயற்கை காட்சிகளும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். கன்னியாகுமரி போனால் இந்த இடத்தை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க.

மாத்தூர் தொட்டி பாலம்
மாத்தூர் தொட்டி பாலம்

பத்மநாபபுரம் அரண்மனை

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான அரண்மனைகளில் இதுவும் ஒன்று. கட்டடக்கலை, மன்னர்களின் ஆயுதங்கள் என அரண்மனையில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் பார்க்க பார்க்க பிரமிப்பை அதிகமாக்கிக்கொண்டே இருக்கும். திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு இது உரிமையானது. இதற்கு அருகில் உதயகிரி கோட்டையும் உள்ளது. மார்த்தாண்ட வர்மா எனும் அரசரால் இது கட்டப்பட்டது. கன்னியாகுமரிக்கு அருகில் வட்டக்கோட்டை என்ற அரண்மனையும் உள்ளது. வட்ட வடிவில் இது கட்டப்பட்டிருக்கும் என்பதால் இதற்கு வட்டக்கோட்டை என்று பெயர்.

பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குற்றாலம் என இதைச் சொல்லலாம். இந்த நீர்வீழ்ச்சியின் மேல்பகுதி இயற்கை அழகு மிகுந்தது. சிறுவர்களுக்கான பூங்கா, படகு சவாரி, யானைகளின் ஆனந்தக் குளியல் என பல விஷயங்களையும் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றால் நம்மால் பார்க்க முடியும். கொஞ்சம் ஆபத்தானதும்கூட பார்த்து போங்க மக்களே!

திற்பரப்பு நீர்வீழ்ச்சி
திற்பரப்பு நீர்வீழ்ச்சி

இதைத் தவிரவும் இன்னும் பல சுற்றுலாத்தளங்கள் கன்னியாகுமரியில் நிறைந்துள்ளது. நீங்க கன்னியாகுமரிக்கு போனால் எந்த இடத்துக்கு போனும்னு ஆசைப்படுறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: Cruise Ship-களை விடுங்க; சரக்குக் கப்பல்ல டிராவல் பண்ணிருக்கீங்களா.. டிரெண்டாகும் Freighter Travel!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top