சமகாலத்தில் நடந்த நிஜ சம்பவத்தை வைத்து ஹிரோயிஸம் கலந்து பேசும் சினிமாதான் எதற்கும் துணிந்தவன்.
Streaming Link
Theater
Story Line
தான் உண்டு தான் வேலை உண்டு தான் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வருபவர் கண்ணபிரான் (சூர்யா). இவர் பக்கத்து கிராமத்து ஆதினியை (பிரியங்கா மோகன்) காதலித்து கரம்பிடிக்கிறார். அதே கிராமத்தில் அரசியல் செல்வாக்கு உடைய தொழிலதிபர் இன்பா(வினய்). தன்னுடைய ஆதாயத்திற்காக நிழலுலகத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதை வீடியோ எடுத்து மிரட்டி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிறார். இந்த இருண்ட உலகத்தில் கண்ணபிரானின் மனைவியான ஆதினியும் மாட்டிக்கொள்கிறார். இதில், தலையிடும் கண்ணபிரானுக்கு தன் மனைவி போலவே 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. வில்லன் கும்பலை தண்டித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விடுதலை வாங்கித் தருவதுதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதை.
WoW Moments 🤩
இரண்டு படங்கள், மூன்று ஆண்டுகள் கழித்து திரையில் தோன்றுகிறார் சூர்யா. சுறுசுறுப்பான நடிப்பு, விறுவிறுப்பான சண்டை, உடைந்து போகும் எமோஷன் என கமர்ஷியலாக கலந்துகட்டி அடித்திருக்கிறார் சூர்யா. ஹீரோயின் பிரியாமோகன். க்ளிஷேவான காதல் காட்சி, கல்யாண காட்சி என டெம்ப்ளேட் கதாநாயகியாக வந்திருந்தாலும் செகண்ட் ஹாஃபில் இவருக்கான ஒரு இடம் ஆணித்தரமாக பதிந்திருக்கிறது.
‘நான் ஒரு அதுன்னு நீ ஒரு இதுடா’ என்று சொன்னவுடன் சூரிதான் நமக்கு நினைவில் வருவார். அந்த ரக காமெடிகள் படத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையும் மீறி தேவதர்ஷினி – இளவரசு காம்போவில் இடம்பெற்ற சில காமெடி காட்சிகள் ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது.
பாலியல் துண்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் பல கதைகள் தமிழ் சினிமாவின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. ஆனால் அது அனைத்தில் இருந்து தணித்துத் தெரிவதுதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் மிகப்பெரிய பலம். பாதிக்கப்படும் பெண்களுக்கு ஹீரோ ஒரு அந்நிய நபராகவே இருப்பார். ஆனால் ET-யில் தன்னுடைய மனைவியே பாதிக்கப்பட்டிருப்பதுபோல் திரைக்கதையை அமைத்திருப்பது தனி சிறப்பு.
பாதிக்கப்பட்ட பிரியங்கா மோகனின் டிப்ரஷன் மனநிலையை வெளிப்படுத்திய விதத்தில் ஆரம்பித்து சூர்யா அதற்கு ஆறுதல் தெரிவிப்பது, ‘உன்னோட உடம்பை விட அவனோட எண்ணத்துலதான் வக்கிரம் அதிகமா இருக்கு’ என்று சொல்வது, குறிப்பாக கிளைமாக்ஸில் பாதிப்பு ஏற்படுத்தியோரின் குடும்பம் குறிப்பிட்ட அந்த விஷயத்துக்காக ரியாக்ட் செய்தது என ET-யில் ஈர்க்கும் விஷயங்களும் அதிகம்.
AWW Moments 😫
படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கிட்டத்தட்ட ஒரு 1074 அண்ணே டயலாக் வந்திருக்கும். ஒரு கட்டத்தில் ஒருவேளை இது அண்ணாத்த பார்ட் 2 என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. சரி அதற்கான படம்தான் என்றாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடர்த்தியாக காட்டாமல் வெறுமனே சூர்யா – பிரியங்கா மோகன் காதல் காட்சிகள் படத்தில் முக்கால்வாசி இடத்தில் வருகிறது.
படத்தின் வில்லனாக நடித்த வினய் ப்ரோ, இன்னும் டாக்டர் வைபில் இருந்து வெளிவரவே இல்லை. ஒரு படத்தின் வில்லன் இனிமேல் எந்த படத்திலாவது பியானோ வாசித்தால் அவருக்கு அபராதம் அளிக்க வேண்டி மேல்முறையீடு செய்ய வேண்டும். சரக்கு, போதை பொருள், வில்லத்தனமான சிரிப்பு, பெண்களை வலுவிழந்தவர்களாக பார்க்கும் மனோபாவம் இதோடு ஒரு காட்சியில் அரை ஸ்பூன் பியானோ வாசித்தல் இப்படியெல்லாம் செய்தால் தமிழ் சினிமாவின் வில்லன் சுட சுட ரெடி எனும் பழக்கத்தை இன்னும் எத்தனை படத்தில் வருமோ தெரியவில்லை.
முதல் பாதியில் தேவையில்லாத ஆணிகள் ஏராளம். ஆனால், ஒரு கட்டத்தில் படத்தின் கதை வேகமெடுத்த உடன் அந்த வேகத்திலே சென்று முடிந்துவிட வேண்டும். இதுதான் காலங்காலமாக கமர்ஷியல் சினிமாவின் ஃபார்முலா. ஆனால் படம் சீரியஸான கன்டென்டை பேச ஆரம்பித்த பிறகும்கூட காதல் காட்சி, காமெடி காட்சி, கட்டிப்பிடித்து கொஞ்சும் காட்சி என்று வைத்திருந்தது படத்தோடு ஒன்ற விடாமல் செய்துவிட்டது. இசையாகவும் சில இடங்களில் தவிர ‘அண்ணாத்த’ இமானின் இசை பெரிதாகக் கவரவில்லை.
Verdict
குடும்பங்கள் கொண்டாடும் சினிமா ப்ளஸ் சமூகத்தில் அரங்கேறும் அவலங்கள் என இரண்டையும் கூட்டிக் கழிக்கும் போது ஓரளவுக்கான கமர்ஷியல் சினிமாவாக வெளிவந்திருக்கிறார் எதற்கும் துணிந்தவன்.
0 Comments