இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 9 மாதம் முதல் 4 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டூவீலர் பயணம் – புதிய விதிகள்
4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திருத்தப்பட்ட வரைவு விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி,
- நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் டூவீலரில் பயணிக்கும்போது அவர்களை ஓட்டுநரோடு இணைக்கும் வகையில் இணைப்பு பெல்ட் போட வேண்டும். அந்த பெல்ட் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் (ISI) அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தரமான நைலான் இழைகளால் உருவாக்கப்பட்ட அது, மழை புகா வண்ணம் இருக்க வேண்டும். ஓட்டுநர் – குழந்தையை இணைக்கும் இணைப்பு பெல்டில் இருவருக்கும் இடையே பஞ்சு பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் ஒன்பது மாதம் முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். பிஎஸ்ஐ தர நிர்ணய சான்று பெற்ற ஹெல்மெட்டைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஓட்டுநரே பொறுப்பாவார்.
- குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அதிகபட்ச வேகம் 40 கி.மீ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த வரைவு விதிகள் குறித்த ஆலோசனைகள், ஆட்சேபனைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக இணைச் செயலாளருக்குக் கடிதம் வாயிலாகவோ அல்லது comments-morth@gov.in என்ற இ-மெயில் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.
இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி, குழந்தைகளை ஓட்டுநரோடு இணைக்கும் இணைப்பு பெல்ட் பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். 4 வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த விதிகளை மீறும் ஓட்டுநருக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதங்கள் தற்காலிகமாக ஓட்டுநர் உரிமம் ரத்து அல்லது இரண்டு சேர்த்தோ விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129-ல் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.