பிரணாமர்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் மீது போலீஸார் வழக்குப் பதிந்திருக்கிறார்கள். என்ன நடந்தது?
நந்தகுமார் பாகல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல். தனது கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும் இவர் சமீபத்தில் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராம மக்களையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், பிராமணர்களை உங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்காதீர்கள். நான் மற்ற சமூக மக்களிடமும் இதுபற்றி பேசப்போகிறேன், அதன்மூலம் பிராமணர்களை நாம் புறக்கணிக்க முடியும். அவர்களை வோல்கா நதிக்கரையோரத்துக்குத் துரத்தியடிக்க வேண்டும்’’ என்று பேசியிருந்தார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பல்வேறு மாநிலங்களில் நந்தகுமார் பாகலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் போராட்டங்கள் வலுத்த நிலையில், அவர் மீது நடவடிக்கை கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் முறையிடப்பட்டது.
பூபேஷ் பாகல்
இந்தநிலையில், டிடி நகர் காவல்நிலையத்தில் சர்வ் பிராமிண் சமாஜ் என்ற அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார் பாகல் மீது இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை வளர்ப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாகப் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், “யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை. அவர், 86 வயதான எனது தந்தையாக இருந்தாலும் சரி. அனைத்து மதம், இன மக்களின் உணர்வுகளையும் சத்தீஸ்கர் அரசு மதிக்கிறது. குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிராக எனது தந்தை நந்தகுமார் பாகல் கூறிய கருத்துகள் சமூக அமைதியைக் குலைத்திருக்கிறது. அவரது கருத்து எனக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
என்னுடைய அரசியல் பார்வை என்னுடைய தந்தையுடையதை விட மாறுபட்டது. ஒரு மகனாக அவரை நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு முதலமைச்சராக பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். சத்தீஸ்கர் ஆளும் கட்சியான காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வெடித்து, தலைமை மாற்றம் கொண்டு வரப்படும் என்று கருதப்படும் நிலையில், இந்த புதிய சர்ச்சை மாநில அரசுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.
Also Read – திராவிடக் களஞ்சியம் சர்ச்சை… எதிர்ப்பும் அரசின் விளக்கமும் – பின்னணி என்ன?