சொத்துப் பத்திரங்கள் மிஸ்ஸிங்கா.. கைகொடுக்கும் True or Certified copy – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

நில உரிமையாளர்களைப் பொறுத்தவரை சொத்துப் பத்திரம் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் ரொம்பவே முக்கியமானவை. அவை தொலைந்துபோகும் பட்சத்தில் நகலுக்கு விண்ணப்பிப்பது எப்படி, அதற்கு எந்த மாதிரியான ஆவணங்கள் தேவை போன்ற தகவல்களைப் பத்திதான் இந்தக் கட்டுரையில நாம பார்க்கப்போறோம்.

சொத்துப் பத்திரம்

ஒரு நிலத்துக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்பதற்கு சான்று ஆவணவே சொத்துப் பத்திரம். ஒருவருக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு சொத்துக்குத் தாய் பத்திரம் என்பது முக்கியம் என்பார்கள். அந்த வகையில் சொத்துப் பத்திரங்கள், பத்திரப் பதிவு ஆவணங்கள், பவர் பத்திரம் உள்ளிட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனாலும், சில நேரங்களில் இந்த ஆவணங்கள் சேதமடைந்தாலோ, காணாமல் போனாலோ, திருட்டுப் போனாலோ, அந்த சொத்தை விற்கும்போதோ அல்லது அடமானம் வைக்கும்போதோ சிக்கல் ஏற்படலாம்.

நகல் பத்திரம் (True or Certified copy) என்றால் என்ன?

ஒரிஜினல் பத்திரம் இல்லாத நிலையில் பத்திர நகலை (True or Certified copy) நீங்கள் விண்ணப்பித்துப் பெற முடியும். இப்படிப் பெறும் நகலை நீங்கள் ஒரிஜினல் பத்திரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உரிய சார் பதிவாளர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பத்திர நகல்களை, ஒரிஜினலுக்குப் பதிலாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றதா?

ஆம். நகல் பத்திரங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகக் கூடியவை. ஒரிஜினல் இல்லாதபட்சத்தில் இவற்றை அதற்குப் பதிலாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இடத்தை கிரயம் செய்ய, அடமானம் வைக்க போன்ற எந்தவொரு நடைமுறைக்கும் இந்த பத்திரங்களை சட்டரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நகல் ஆவணம் பெறுவது எப்படி?

உங்கள் பத்திரத்துக்கான நகலை ஆஃப்லைனில் நேரடியாக சார் பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பித்துப் பெற முடியும். ஆன்லைனிலும் இந்த வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, நீங்கள் தமிழக அரசின் https://tnreginet.org.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பித்துப் பெற முடியும்.

  • இணையதளத்தில் ஒரு பயனராகப் பதிவு செய்துகொள்ளவும். மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் கணக்கைப் புதிதாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
  • லாக்-இன் செய்த பிறகு மின்னணு சேவை என்கிற சேவையின் கீழ் `சான்றளிக்கப்பட்ட நகல்’ என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
  • அதன்பிறகு திறக்கும் பாக்ஸில், சொத்து ஆவணம், வில்லங்க சான்றிதழில் உள்ள ஆவண எண், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடுங்கள்.
  • அதற்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திய பிறகு, Acknowledge Receipt கிடைக்கும். அதற்குக் கீழ் இருக்கும் லிங்கில் கிளிக் செய்து விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
  • நீங்கள் விண்ணப்பித்து குறைந்தது இரண்டு வேலை நாட்களுக்குப் பிறகு, சரியான விவரங்களை நீங்கள் கொடுத்திருக்கும் பட்சத்தில், உங்கள் சொத்து பத்திரத்தின் நகலை ஆன்லைனிலேயே டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

Also Read – LIC IPO… பாலிசிதாரர்கள் நோட் பண்ண வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top