தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் `முதலமைச்சர் தகவல் பலகை – தமிழ்நாடு 360’ எனும் புதிய வசதி தொடங்கப்பட இருக்கிறது. எந்தத் துறையில் என்னென்ன பணிகள் நடக்கின்றன, எந்த நிலையில் பணிகள் இருக்கின்றன என்பதை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன ஸ்பெஷல்?
தமிழ்நாடு அரசு
விரைவாக முடிவுகளை எடுப்பது மற்றும் சேவைகளை முறையாக வழங்கும் வகையிலும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையிலும் தமிழக அரசு முதலமைச்சரின் மின்னணு தகவல் பலகை எனும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட குறைதீர்க்கும் பிரிவுகளை ஒருங்கிணைத்து `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் புகார்கள், கோரிக்கைகள் போன்றவை பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்தத் துறை செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி காவல்துறை வரையிலான அனைத்து துறை சார்ந்த தகவல்களை ஒருங்கிணைத்து, அதன் பணிகள் எந்தெந்த நிலையில் இருக்கின்ற என்ற விபரம் அடங்கியதாக முதல்வரின் மின்னணு தகவல் பலகை தொடங்கப்பட இருக்கிறது.
முதல்வரின் மின்னணு தகவல் பலகை (CM Dashboard) – என்ன ஸ்பெஷல்?
இந்தத் தகவல் பலகை தமிழக அரசின் அனைத்துத் துறைகள் பற்றிய தகவல்களை நிகழ் நேரத்தில் (Real time) அளிக்கும் என்கிறார்கள் அரசு அதிகாரிகள். மேலும், மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு நிலவரம், மழை நிலவரம், 25-க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், அரிசி போன்றவற்றின் விலை நிலவரங்கள் மற்றும் விலையேற்றத்துக்கு வாய்ப்பிருக்கிறதா போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கும். இந்தத் தகவல் மூலம் தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும். இந்தத் தகவல் பலகை உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அரசு துறைகள் மட்டுமல்லாது தமிழகம் குறித்த தகவல் சுரங்கமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
எப்படி செயல்படும்?
அரசின் ஒவ்வொரு துறைக்கும் முதல்வர் தகவல் பலகை திட்டத்துக்குத் தகவல் அளிக்கும் நோடல் ஆபீஸர் நியமிக்கப்படுவார். அந்தத் துறை சார்ந்த தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியை அவர் மேற்கொள்வார். தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியோடு நிகழ் நேரத்தில் தகவல் பலகையின் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். இதை ஒருங்கிணைக்க அதிகாரிகளை உள்ளடக்கிய தனி குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக இணையதளம் மூலம் பொதுமக்களுக்கும் இந்தத் தகவல்களைப் பார்வையிட வசதி செய்யப்பட இருக்கிறது. `இந்தத் திட்டத்தின் கீழ் மக்களின் நாடித் துடிப்பை அரசு அறிந்துகொள்ளும். பொதுமக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். அதேபோல், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, எந்தெந்தப் படிநிலைகளில் இருக்கின்றன என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் முதல்வருக்கு என்ன தெரியுமா… அது பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும்’’ என்கிறார்கள் அரசு தரப்பில். இதன்மூலம், அரசின் ஒவ்வொரு துறையும் ஏற்கனவே அளித்து வரும் சேவைகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் எதிர்காலத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
Also Read:
இந்தியாவில் முதல்முறையா?
முதலமைச்சருக்கென தனி தகவல் பலகைத் திட்டங்கள் இந்தியாவில் ஒடிசா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிஸிஸ் போன்றவை பயன்படுத்தப்படுவதால், அவற்றையெல்லாம் விட மேம்பட்டதாக இருக்கும் என்கிறார்கள். நிகழ் நேரத் தகவல்கள் மட்டுமல்லாது, கணிப்புகளையும் வழங்கும் வகையில் முதலமைச்சரின் மின்னணு தகவல் பலகை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அரசின் அனைத்து சேவைகளும் ஒருங்கிணைக்கப்படுவதோடு, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசால் ஏற்று நடத்தப்படும் நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் பற்றிய விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். அடுத்தடுத்த வாரங்களில் கூடுதல் தகவல் பலகைகள் இதன்கீழ் இணைக்கப்படும் என்று தெரிகிறது.