முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஓ.பி.எஸ் – தர்மயுத்தம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த 2016 டிசம்பரில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ல் தர்மயுத்தம் தொடங்கினார். இதையடுத்து, 2017 ஆகஸ்டில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்த நிலையில், அப்போதைய அ.தி.மு.க அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஒரு நபர் ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆணையம் சார்பில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. ஆணையம் தரப்பில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல்முறையாக ஆஜரானார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு என சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 78 கேள்விகளை ஆணையம் கேட்டிருந்தது. அதில், பெரும்பான்மையான கேள்விகளுக்குத் ’தெரியாது’ என்பதையே ஓ.பி.எஸ் பதிலாகச் சொல்லியிருக்கிறார்.
ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொன்னது என்ன?
தர்மயுத்தம் தொடங்கியது முதல் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது வரையில் அளித்த பேட்டிகள் சரியே என்று வாக்குமூலம் அளித்திருக்கும் ஓ.பி.எஸ், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சொந்த ஊரில் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார். அந்த விவரம் குறித்து உதவியாளர் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். சென்னை வந்தபிறகு தலைமைச் செயலாளரிடம் அதுபற்றிய விவரங்களைக் கேட்டறிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். அதேபோல், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தளத்தின் சிசிடிவி காட்சிகளை அகற்றுமாறு தான் கூறவில்லை என்றும் சசிகலா அழைப்பில் பேரில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் திரும்பச் சென்றது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
`2016 செப்டம்பர் 21 மெட்ரோ ரயில் நிகழ்வுக்குப் பிறகு ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை’ என்று சொல்லியிருக்கும் ஓ.பி.எஸ், அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்தவிதமான உடல்நலக் கோளாறு இருந்தது என்பது பற்றியும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில், முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர் போல் இவரையும் வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கலாம் என்று அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் சொன்னதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கு, அப்போலோ மருத்துவர்களிடம் ஆலோசித்து விட்டு முடிவெடுக்கலாம் என்று சி.விஜயபாஸ்கர் சொன்னதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்திருக்கிறார். அதற்கு அடுத்த நாள் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மருமகன் விஜயகுமார் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து இதே கருத்துகளை வலியுறுத்தியதாக ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார். அப்போது, ‘ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து அவர் வீடு திரும்பி விடுவார்’ என விஜயகுமார் ரெட்டி சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், ஆணையத்தில் ஆஜரான முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் கொடுத்த வாக்குமூலத்தைச் சுட்டிக்காட்டி, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது பற்றி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னது பற்றி ஓ.பி.எஸ்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், ‘அதுபற்றி ராமமோகனராவ் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் உடனே கையெழுத்துப் போட்டிருப்பேன். அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்தத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் போன்றோர்தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த காவிரி கூட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவரிடம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடக்க இருக்கிறது.