தமிழகத்தில், கருணாநிதியின் நகைச்சுவை உணர்வுக்கு உதாரணமாக ஏராளமான சம்பவங்களைக் குறிப்பிட முடியும். தமிழக மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அவற்றில் பல நிகழ்வுகள் தெரிந்த விஷயங்களே… ஆனால், ஒட்டுமொத்த இந்தியத் தலைவர்களும் கருணாநிதியின் நகைச்சுவை உணர்வையும், அரசியல் நுண் உணர்வையும் தெரிந்து கொண்ட சம்பவம் 1996-ஆம் ஆண்டு நடைபெற்றது.
1996-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி சார்பில் யார் அடுத்த பிரதமர் என்பதற்கான தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஐக்கிய முன்னணித் தலைவர்களான சுர்ஜித், ஜோதிபாசு, லல்லு பிரசாத் யாதவ், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, மூப்பனார்,முலாயம் சிங் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய அகில இந்தியச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை அழைத்த கருணாநிதி, “யோவ் யெச்சூரி, இந்தக் கூட்டத்தில் நீதான்யா வில்லன்” என்றார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த யெச்சூரி, என்ன சொல்கிறீர்கள்.. நான் அப்படி என்ன செய்தேன் என்று கேட்க, அதற்குப் பதில் சொன்ன கருணாநிதி, இந்தக் கூட்டத்தில் நீ, என்னோடும், மூப்பனாரோடும் தமிழில் பேசுகிறாய்; தேவேகௌடாவுடன் கன்னடத்திலும், சுர்ஜித்துடனும், ஜோதிபாசுடனுடன் ஆங்கிலத்திலும் பேசுகிறாய்: லல்லுவோடும், முலாயமோடும் ஹிந்தியிலும், சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கிலும் பேசுகிறாய்.
நாங்கள் ஒருவருக்கொருவர் என்ன நினைக்கிறோம் என்று மற்றவருக்குத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் அனைவரும் என்ன நினைக்கிறோம் என்பதை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதனால், நீதான் வில்லன் என்றார். இந்த விஷயத்தை கூட்டத்திற்குப் பிறகு, அனைத்துத் தலைவர்களிடமும் யெச்சூரி எடுத்துச் சொல்ல, மற்ற அனைத்துத் தலைவர்களும், கருணாநிதியின் நகைச்சுவை உணர்வையும், முன் ஜாக்கிரதை உணர்வையும் புரிந்து ரசித்தனர்.
Also Read : பாக்ஸிங் டு அ.தி.மு.க-வின் வடசென்னை முகம் – மதுசூதனன் நினைவலைகள்!