மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று மீன ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
மீன ராசி
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்கார்கள் ஆவர். ராசியின் அதிபதி குரு ஆவார். குரு இந்த ராசியில் ஆட்சி புரிந்தாலும், அவரின் பகை ராசியான சுக்கிரன் உச்சமடையும் ராசி இதுவாகும். இதன் குறியீடு இரண்டு மீன்கள். மீன ராசிக்காரர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தையல் நாயகி சமேத வைத்தியநாதரை வழிபட்டால் சகல செல்வங்களும் பெறுவர். குடும்பத்தோடு வைத்தியநாதரை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால், வாழ்வில் வளம் பெற்று எல்லாத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்திருக்கிறது வைத்தியநாதர் ஆலயம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலமான இது, பாடல்பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 16-வது தலமாகும். இந்தக் கோயில் முத்துக்குமாரசுவாமியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் மீது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் பாடப்பெற்றது. மருத்துவராக இருந்து மக்களின் பிணிகளைத் தீர்ப்பார் என்பதாலேயே மூலவருக்கு வைத்தியநாதர் என்று பெயர் வந்தது என்பது நம்பிக்கை.
வைத்தியநாதர், அம்பாள் தையல் நாயகியோடு சேர்ந்து மூலிகைத் தைலத்துடன் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். நாடி ஜோதிடத்துக்குப் புகழ்பெற்ற தலமான இந்தக் கோயிலைச் சுற்றி நாடி ஜோதிடர்கள் அதிகமாக இருக்கிறார்கள். மீன ராசிக்காரர்கள் குடும்பத்தோடு வைத்தீஸ்வரனைத் தரிசித்தால் குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம். தை மாதம், தை செவ்வாயை ஒட்டி 10 நாட்கள் நடைபெறும் விழா, ஐப்பசி கந்தசஷ்டி, வைகாசி மண்ணாபிஷேக, மண்டலாபிஷேக விழா, பிரதோஷ நாட்களில் விசேஷமாக இருக்கும். காலை 6 – 11 மணி வரையிலும், மாலை 4 – இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். கோயிலில் இருக்கும் சித்தாமிர்தக் குளத்தில் புனித நீராடினால் நீங்காத நோய்களில் இருந்தும் குணமடையலாம் என்பது நம்பிக்கை.
எப்படிப் போகலாம்?
புதிதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் சீர்காழி தாலுகாவில் இருக்கிறது வைத்தீஸ்வரன் கோயில். மயிலாடுதுறை, சீர்காழிக்குத் தமிழகம் முழுவதுமிருந்து பேருந்து, ரயில் போக்குவரத்து இருக்கிறது. அங்கிருந்து பேருந்து, வாடகை வண்டிகளில் கோயிலுக்குச் செல்லலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் புதுச்சேரி. சென்னையில் இருந்து 246 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 94 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 63 கி.மீ தூரத்திலும் மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ தூரத்திலும் வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.
மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
Also Read:
- திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில்
- சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில்
- சீர்காழி பிரம்மபுரீசுவரர் கோயில்
- பூம்புகார்
- திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
I visited various web sites but the audio quality ffor
audio songs existing at this website is in fact superb.
Have a look at my web-site … https://livegamevavada.webgarden.com/