நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி-கேது, ராசி அதிபதி-செவ்வாய். அஸ்வினி நட்சத்திரத்தின் நட்சத்திர நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் செவ்வாயும், இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், மூன்றாம் பாதத்தில் புதனும் நான்காம் பாதத்தில் சந்திரனும் வலம் வருகிறார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனஉறுதி மிக்கவர்களாகவும், எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் குணாதிசயத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பர். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமான், விநாயகர், மகாவிஷ்ணு ஆகிய தெய்வங்களை தொடர்ந்து வணங்கி வர நன்மைகள் பிறக்கும் என்பது ஐதீகம்.
திருத்துறைபூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம்
தன்னம்பிக்கையும் தைரியமும் மிகுந்து விளங்கும் அஸ்வினி நட்சத்திர அம்சம் கொண்டவர்கள் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்த நட்சத்திரகாரர்களாவர். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி நட்சத்திர தினத்தன்று திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு சென்றுவர நன்மை உண்டாகும். அந்த நாட்களில் செல்ல முடியவில்லை என்றால் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இத்தலத்துக்குச் சென்று வரவேண்டும்.
இத்தலத்தில் உள்ள, ஈசனை அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் வழிபாடு செய்தால் மனதில் உள்ள பயங்கள் நீங்கி தன்னம்பிக்கை பிறக்குமாம். இந்தக் கோயிலிலுள்ள அம்பாளுக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றினால் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அடைந்த தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்தத் திருத்தலத்தின் சிவனை வழிப்பட, கற்கும் கலைகளில் முதன்மை பெற்று திகழ முடியும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குறிப்பாக இத்தலத்தின் பெரியநாயகி அம்பாளை வணங்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

எப்படிப் போகலாம்?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்திருக்கிறது பிறவி மருந்தீஸ்வரர் கோயில். திருவாரூருக்கு ரயில், பேருந்து வசதிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இருக்கின்றன. திருவாரூர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லலாம். திருத்துறைப் பூண்டியில் ரயில் நிலையமும் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் கோயில் அமைந்திருக்கிறது.
மிஸ் பண்ணகூடாத இடங்கள்
கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம் கூத்தனூர், நவக்கிரக ஆலயங்கள்.
0 Comments