இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடருக்கு `சையது முஷ்டாக் அலி’ பெயர் சூட்டப்பட்டது ஏன் தெரியுமா… அவரின் ஃபேமஸான மான்செஸ்டர் சதத்தைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
சையது முஷ்டாக் அலி
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் சப்-இன்ஸ்பெக்டரின் மகனாக 1914-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி பிறந்தவர் சையது முஷ்டாக் அலி. சிறு வயதிலேயே பேட்டிங்கில் கலக்கிய அவரின் திறமையை 13-வயது சிறுவனாக இருக்கும்போதே கணித்தவர் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான சி.கே.நாயுடு. அவரது வழிகாட்டுதல்படி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய முஷ்டாக் அலி, பெரிய அளவில் பிரபலமானது 1936-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரின்போதுதான்.

1936-ம் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இரண்டாவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து Wally Hammond-ன் சதத்தின் உதவியோடு 571/8 என்ற ஸ்கோரோடு டிக்ளேர் செய்தது. போட்டியை இன்னிங்ஸ் வெற்றியோடு முடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த இங்கிலாந்துக்குத் தொடக்க வீரராகக் களமிறங்கிய அலி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
Also Read : The Ashes: நூற்றாண்டுகளைக் கடந்து தொடரும் பகை – ஆஷஸ் தொடர் பிறந்த கதை தெரியுமா? #AusVsEng
ஸ்பின் பவுலர் டு ஓபனர்!
சுழற்பந்து வீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் களம் கண்ட அலி, 7 வது வீரராகத்தான் களமிறங்குவார். மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய ஓபனர் திலாவர் ஹூசைனுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், விஜய் மெர்சண்டுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய அலி, Gubby Allen வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் Gubby Allen – Alf Gover இணை. அந்த காலகட்டத்தில் உலகின் முன்னணி பவுலர்களான இவர்களது பந்துவீச்சை சிதறடித்தார். ஆஃப் சைடில் வீசப்பட்ட பவுன்சர்களை அநாசயமாக மிட் லெக்கில் பவுண்டரி அடித்து மிரட்டிக் கொண்டிருந்தார் இந்தியாவின் புதிய ஓபனிங் பேட்ஸ்மேன் அலி. மான்செஸ்டர் ரசிகர்கள், இந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்காது என்று நினைத்திருக்கலாம்.

ஆனால், விஜய் மெர்சண்டோடு கைகோர்த்து முதல் விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்தார். அந்தப் போட்டியில் 112 ரன்கள் எடுத்த முஷ்டாக் அலி, வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். அலி 90 ரன்களில் இருந்தபோது அவரிடம் வந்த இங்கிலாந்து ஹாமண்ட், டெஸ்ட்டில் சதமடிப்பது எப்போதாவது நிகழும் சம்பவம். அதனால், ‘நிதானமாக விளையாடுங்கள்’ என்று அட்வைஸ் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அடுத்த மூன்று ஷாட்டுகளுமே பவுண்டரிகளாகி சதத்தைக் கடந்தார் அலி. டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல ஹேண்டில் செய்த சையது முஷ்டாக் அலியின் நினைவாகவே உள்ளூர் டி20 தொடருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 1936 – 1952 வரை விளையாடினாலும், மொத்தமே 11 டெஸ்டுகளில் மட்டுமே அவர் விளையாடியிருக்கிறார். இதில், 32.21 சராசரியுடன் 612 ரன்கள், 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் 226 மேட்சுகளில் விளையாடியிருக்கும் அவர், 13,213 ரன்கள் மற்றும் 162 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 1964-ல் பத்மஸ்ரீ விருதுபெற்ற அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஜூல்ஃபிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் குடியுரிமை வழங்க இரண்டு முறை முன்வந்தார். ஆனால், புன்னகையோடு மறுத்த அவர், பாகிஸ்தான் பிரதமர் தன் மீது கொண்ட பாசத்தைக் கௌரவிக்கும் வகையில் தனது பேரனுக்கு ஜூல்ஃபிகர்’ என்று செல்லப் பெயர் வைத்தார். 1948 ஆஸ்திரேலிய சர்வீஸ் அணிக்கெதிரான போட்டியில் முஷ்டாக் அலி சேர்க்கப்படாததைக் கண்டித்து ரசிகர்கள், `No Mushtaq; No test’ என்று கோஷமிட்டது, ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பை உலகுக்குப் பறைசாற்றிய நிகழ்வு.
0 Comments