வாச்சாத்தி

ஜெய்பீம் சம்பவத்தையெல்லாம் மிஞ்சுன கொடுமை – வாச்சாத்தி-யில் என்ன நடந்தது?

1992 ஜூன் 20-ம் தேதி – தருமபுரி அரூர் பக்கத்துல இருக்க வாச்சாத்தி கிராமத்தைச் சுத்தியிருக்க பகுதிகள்ல சந்தன மரக் கடத்தல் நடக்குதானு செக் பண்ண சிங்கார வேலுங்குற துணை வனக் காப்பாளர் தலைமையில ஃபாரஸ்ட் டிபார்மெண்ட் ஆட்கள் போறாங்க. அப்போ வாச்சாத்தியை ஒட்டிய வரட்டாற்றுப் படுகைல சில சந்தன மரக் கட்டைகள் புதைச்சு வைச்சிருக்கதைக் கண்டுபிடிக்குறாங்க. இதையடுத்து அங்க பக்கத்துல இருந்த நிலத்துல வேலை பார்த்துட்டு இருந்த சின்னப் பெருமாள்ங்குறவரைக் கூப்பிட்டு விசாரிக்குறாங்க. ஒரு கட்டத்துல ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் டீம்ல இருந்த செல்வராஜ்ங்குறவர், சின்னப் பெருமாளைக் கடுமையாத் தாக்குறார். அவரோட அலறல் சத்தம் கேட்டு அங்க வந்த வாச்சாத்தி மக்களுக்கும் ஃபாரஸ்ட் டிபார்மெண்ட் ஆட்களுக்கும் கைகலப்பாகுது. இதுல செல்வராஜ் காயமடையவே, பின்னாடி நடக்கப்போற அநியாயம் என்னன்னே தெரியாம அந்த கிராமத்தைச் சேர்ந்தவங்க, அவரை மாட்டுவண்டில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குறாங்க.

வாச்சாத்தி கொடுமை நடக்குறதுக்கான ஆரம்பப் புள்ளி இதுதான். கவர்மெண்ட் ஆபிஸர்ஸ்டோட ஈகோவால நடந்த கோரம் அது. சிட்டிசன் படத்துல ஒரு ஊரையே இல்லாம ஆக்க கவர்மெண்ட்ல இருக்க ஒவ்வொரு டிபார்மெண்டும் எப்படியெல்லாம் கைகோர்க்குதுனு சொல்லிருப்பாங்கல்ல. அப்படியான ஒரு கொடுமைதான் இந்த சம்பவத்துக்குப் பிறகும் நடந்துச்சு.  

எங்க ஆளுங்க மேலேயே கைவச்சுட்டியானு சொல்லி ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த 155 பேரு, போலீஸ்காரங்க 108 பேரு, ரெவின்யூ டிபார்ட்மெண்ட்ல இருந்த 6 ஆர்.ஐ-கள் உள்பட 260 பேருக்கும் அதிகமான கவர்மெண்ட் டீம் வாச்சாத்தில போய் இறங்குனாங்க. ஏதோ எதிரி நாட்டுக்குப் படையெடுத்துப் போன மாதிரி அந்த டீம் நடந்துக்கிட்டாங்க. இந்த டீமைப் பார்த்த மலைகிராம மக்கள் சிலர் காடுகளுக்குள்ள போய் ஒளிச்சாங்க. அந்த டைம்ல கண்ல சிக்குன மிச்ச அத்தனை பேர் மேலயும் போலீஸ் – ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் டீம் கொடூரத் தாக்குதல் நிகழ்த்துறாங்க. வீடுகளையும் அடிச்சு நொறுக்குனதோட பணம், நகை, ஏன் பட்டு சேலைகள் முதற்கொண்டு சூறையாடிருக்காங்க. ஒரு கட்டத்துல ஊர்ல இருந்த பெண்கள், குழந்தைகள், வயசானவங்க, ஆண்கள்னு 217 பேரையும் வாச்சாத்தியோட அடையாளமா இருந்த, இருக்க அந்த ஆலமரத்தடில வரிசையா நிப்பாட்டிருக்காங்க. அந்த கூட்டத்துல இருந்த 18 பேருக்கு நடந்த கொடுமை வேற யாருக்குமே நடக்கக் கூடாது. 13 வயசு சின்னப்பிள்ளை உட்பட அந்த 18 பேரை ஊருக்குப் பக்கத்துல இருக்க ஏரிக்கரைக்குத் தனிமைப்படுத்தி கூட்டிட்டுப் போன டீம்ல இருந்த சிலர் அவங்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குறாங்க. அத்தோட அவங்க பண்ண கொடுமை நிக்கல.  

ஜெய்பீம்ல ராசாக்கண்ணுக்கு போலீஸார் செஞ்ச கொடுமைகளை எப்படி அதே போலீஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஐ.ஜி.பெருமாள் சாமி விசாரணை பண்ணி வெளிய கொண்டுவருவாரோ… அதேபோலதான் வாச்சாத்தி கேஸும் சரியான டைரக்‌ஷன்ல பயணிக்க ஒரு கவர்மெண்ட் ஆபிஸர் முக்கியமான காரணம். அது யாருனு சரியா கண்டுபிடிச்சுட்டா, அதை கமெண்ட்ல சொல்லுங்க. அதுக்கான விடையும் அப்போ என்ன நடந்துச்சுன்னும் கொஞ்ச நேரத்துல நானே சொல்றேன். அதேபோல், ராசாகண்ணுவுக்காக ரியல் லைஃபில் போராடிய ஜட்ஜ் சந்துருவுக்கும் இந்த கேஸுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு. அதை வீடியோவோட கடைசில சொல்றேன்.

94 பெண்கள், 28 குழந்தைகள் உள்பட 217 பேரையும் அரூர் ஃபாரஸ்ட் டிபார்மெண்ட் ஆபிஸுக்குக் கூட்டிட்டுப் போய் நைட் ஃபுல்லா சட்டவிரோதக் காவல்ல வைச்சிருக்காங்க. ஊர் பெரியவரை நிர்வாணப்படுத்துனதோட, அந்த ஊர் பெண்கள் கைகளில் துடைப்பங்களைக் கொடுத்து அடிக்கச் சொல்லி சித்திரவதைப்படுத்தியிருக்கிறார்கள். நைட் டைம்ல அவங்களுக்கு சரியான சாப்பாடு கொடுக்காமல், தாங்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்த சாப்பாட்ட்டில் எச்சிலைத் துப்பிக் கொடுத்து அதை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். ஜூன் 20-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு வன்முறை வெறியாட்டம் தொடர்ந்திருக்கு. அந்த மக்களோட ஆடுகள், கோழிகளைக் கொன்று அதையே சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். அத்தோட ஊர்ல இருக்க குடிநீர் ஆதாரமான கிணத்துல மண்ணெண்ணையை ஊத்தி அதைப் பயன்படுத்தவே முடியாத நிலைமைல விட்டுட்டுப் போயிருக்காங்க. அதோட மற்ற கால்நடைகளையும் அந்த டீம் கொன்றிருக்காங்க.  வாச்சாத்தில இருந்து அந்த ரெய்டுல 40 டன் சந்தன மரக்கட்டைகளைக் கைப்பத்துனதாவும் கூட்டுக்குழு சொல்லுச்சு. அவ்வளவு சந்தன மரக்கட்டைகளை வைச்சிருக்க மக்கள் ஏன் அப்படியான ஏழ்மை நிலைல இருக்காங்கனு பெரிய கேள்விதான் அப்போ எழுந்துச்சு. அந்த சம்பவத்துக்குப் பிறகு பெண்கள் உள்பட 133 பேர் மேல சந்தனக் கடத்தல் கேஸ் போட்டு சிறையில் அடைச்சாங்க.

இந்த சம்பவத்துல இன்னொரு பெரிய அதிர்ச்சி என்னான்னு அது நடந்து பல நாட்கள் அப்படியொரு சம்பவம் நடந்துச்சுங்குறது வெளியவே தெரியாததுதான். சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பிறகு சித்தேரி மலையில் நடத்தபப்ட்ட பழங்குடியினர் நல மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட வாச்சாத்தியைச் சேர்ந்த ஒருவர் தங்கள் கிராமத்துக்கு நடந்த கொடுமையைச் சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் பழங்குடியினர் நல சங்கத்தைச் சேர்ந்த பெ.சண்முகம், என்.கிருஷ்ணமூர்த்தி, பாஷா ஜான் உள்ளிட்டோர். வாச்சத்தி மக்களுக்காக அப்போ அரூரில் போராட்டம் நடத்திய அவர்கள், அரூர் வட்டாட்சியர்கிட்ட ஒரு புகார் மனுவும் கொடுத்திருக்காங்க. வாச்சாத்தியில் வன்முறை வெறியாட்டம் நடத்துன கும்பல் இருந்தவர்தான் அவர்னு பின்னாடிதான் போராட்டம் நடத்துனவங்களுக்குத் தெரிஞ்சுருக்கு. அதுக்கப்புறம்தான் சேலை சப் ஜெயில்ல இருந்த 133 பேருக்கும் ஜாமீன் வேலைகளைப் பார்த்து கிட்டத்தட்ட 2 மாச போராட்டத்துக்குப் பிறகு அவங்களை வெளியே கொண்டு வந்தாங்க. பாதிக்கப்பட்ட பெண்கள் 18 பேர் சார்பா போலீஸ்ல புகார் கொடுக்க, அவங்க கடைசி வரைக்கும் எஃப்ஐஆரே போடல.

இந்த விவகாரம் வெளில வந்ததும் வழக்கம்போல என்ன நடந்துச்சுன்னே விசாரிக்காம கூட்டு நடவடிக்கைக் குழுவைக் காப்பாத்துற வேலைல அரசாங்கம் ஈடுபட்டுச்சு. அந்த டைம்ல வனத்துறை அமைச்சரா இருந்த செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை ரொம்ப முக்கியமானது. அதுல என்ன சொல்லிருந்தார்னா, அப்படி ஒரு சம்பவமே நடக்கல. 300 குடும்பங்களாக வாழ்ற வாச்சாத்தி மக்கள் அனைவரும் சந்தனக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டனவென்றும், அப்போது வாச்சாத்தி மக்கள் வனத்துறை அதிகாரிகளைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர் என்றும், முதல்வரின் ஆட்சியில் சந்தனக் கடத்தல் தடுப்பில் வரலாறு படைக்கப்பட்டு வருகிறதுனும் சொல்லப்பட்டிருந்தது.

சரி கோர்ட்டுக்குப் போகலாம்னு முடிவெடுத்து இவங்க ஃபைல் பண்ண பொதுநல வழக்கை முதல்ல மெட்ராஸ் ஹைகோர்ட் தள்ளுபடி செய்யுது. இதையடுத்து அப்போதை சிபிஎம் எம்.பி ஏ.நல்லசிவன் உச்ச நீதிமன்றத்துக்குப் போக, இந்த கேஸை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரிச்சு முடிக்கணும்னு ஆர்டர் போடுறாங்க. அப்படி விசாரணைக்கு வந்தபோதுதான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் 3 நாட்கள் நேரடி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவங்க தாக்கல் பண்ண அறிக்கைதான் வாச்சாத்தி கேஸ் வலுப்பெற முக்கியமான காரணம். வாச்சாத்தி மக்கள் சொன்ன மாதிரியான கொடுமைகள் நடந்தது உண்மை. அவங்க சந்தனக் கடத்தல் பண்றவங்க இல்ல. புகார் கொடுத்தபிறகும் கலெக்டரோ, போலீஸ் எஸ்பியோ வட்டாட்சியரோ என ஒரு அதிகாரி கூட வாச்சத்திக்கு நேர்ல போய் விசாரிக்கலைனு பல உண்மைகளை அந்த அறிக்கை சொல்லுச்சு.

4 ஐ.எஃப்.எஸ் ஆபிசர்ஸ் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 269 பேர் மேல சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சது. வழக்கை இழுத்தடிக்க அவர்கள் செய்த பல்வேறு தடைகள், இடையூறுகளை எல்லாம் தாண்டி தருமபுரி கோர்ட் 2011ல 269 பேருமே குற்றவாளிகள்னு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு கேஸில் இவ்வளவு அதிகமான அரசு அதிகாரிகள் குற்றவாளிகள்னு தீர்ப்பு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேஸ் அது. அதேபோல, குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேருமே குற்றவாளிகள்தான்னும் சொல்லுச்சு அந்த தீர்ப்பு.  

Also Read – கோர்ட்ல கொலை, லட்டுக்குள்ள தங்கம்… தாவூத் இப்ராஹிம் முழு கதை!

வாச்சாத்தி கேஸ் தீர்ப்பைப் பொறுத்தவரைக்கும் ஒரு விநோதமான ஒற்றுமையை நாம பார்க்கலாம். 1992 முதல் நடந்துவந்த வாச்சாத்தி கேஸ்ல 2011 செப்டம்பர் 29-ம் தேதி தருமபுரி மாவட்ட கோர்ட் தீர்ப்பளிச்சிருந்தது. அதை எதிர்த்து குற்றவாளிகள் 27 பேர் பண்ண மேல்முறையீட்டு வழக்கோட விசாரணை சென்னை ஹைகோர்ட்ல நடந்துச்சு. கிட்டத்த 12 வருஷங்கள் கழிச்சு அதே தேதியில் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளிச்சது. இதை வாச்சாத்தி கிராம மக்கள் பட்டாசு வெடிச்சு கொண்டாடுனாங்க. வாச்சாத்தி கேஸ்ல வன்கொடுமை செய்ததா 12 போலீஸ்காரங்க மேலயும் கேஸ் நடந்துட்டு இருந்துச்சு. அப்போ கோர்ட்ல கேஸ் முடியுற வரைக்கும் டிபார்ட்மெண்ட் ரீதியா எங்க மேல எந்த ஆக்‌ஷனும் எடுக்கக் கூடாதுனு அவங்க ஃபைல் பண்ண கேஸை விசாரிச்சது அப்போ உயர் நீதிமன்ற நீதிபதியா இருந்த நீதியரசர் சந்துருதான். இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ற உங்க மேல நடவடிக்கை எடுக்குறதை அப்படி தள்ளிப்போட முடியாதுனு சொல்லிட்டு கேஸை டிஸ்மிஸ் பண்ணிருந்தார் நீதிபதி சந்துரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top