Freddie Mercury – இந்தியாவில் இருந்து கிளம்பிய முதல் இசைப்புயல்!

உலகளவில் பெரும்பாலும் திரையிசைப் பாடல்களை மட்டுமே கேட்டு வளர்ந்தவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அறிமுகம் இல்லாத பெயர், ஃபாரூக் பல்ஸாரா. ஆனால், independent இசை கேட்பவர்களுக்கும் ராக் இசையின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தப் பெயர் அறிமுகமாகியிருக்கலாம். இன்னும் தெரியவில்லை என்றால், ஃபாரூக் பல்ஸாராவை, ஃப்ரெடி மெர்குரி என்று அறிமுகப்படுத்தலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், அவரை அவரது விருப்பப்படி ஃப்ரெடி மெர்குரி என்று அறிமுகப்படுத்துவதே சரி. உலகின் பல நாடுகளைத் தன்னுடைய குரலாலும் ராக் இசையாலும் பல ஆண்டுகள் கட்டி ஆண்ட, இன்றும் தனது பாடல்களால் மக்களின் நெஞ்சோடு உரையாடிக்கொண்டிருக்கும் ஃப்ரெடி மெர்குரியைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்கலாம்.

ஃப்ரெடி மெர்குரி
ஃப்ரெடி மெர்குரி

பவளப் பாறைகளுக்கும் அழகிய மணற்பரப்புகளுக்கும் பெயர்பெற்ற இந்தியப் பெருங்கடலில் தான்ஸானியா எல்லையில் இருந்து 2 மைல் தொலைவில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்க தீவில் அமைந்துள்ள ஸ்டோன் டவுன் பகுதியில் செப்டம்பர் 6-ம் தேதி 1946-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த பார்ஸி பெற்றோர்களான பொமி மற்றும் ஜெர் பல்ஸாராவுக்கு மகனாகப் பிறந்தார், ஃபாரூக். ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த அந்த அரசாங்கத்தில் வேலைப் பார்த்த ஜெர் பல்ஸாரா, வேலை நிமித்தமாக ஆப்பிரிக்க தீவுக்குக் குடிபெயர்ந்தார். பின்னர், தன்னுடைய மகனை பள்ளி கல்விக்காக இந்தியாவுக்கே பல்ஸாரா அனுப்பி வைத்தார். எட்டு வயதில் தனியாக கப்பலில் பயணம் மேற்கொண்ட ஃபாரூக், புனே அருகேயுள்ள செயின்ட் பீட்டர்ஸ் தங்கும் பள்ளியில் படித்தார். அதுமட்டுமல்லாமல், இந்திய இசைகளையும் குறிப்பாக லதா மங்கேஷ்கர் போன்ற முன்னணி இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்டு வளர்ந்தார்.

ஃப்ரெடி மெர்குரி
ஃப்ரெடி மெர்குரி

ஃபாரூக், தன்னுடைய பள்ளிப் பருவத்தில் அதிகமாக உருவ கேலிக்கு ஆளானார். இதனால், அவரது பள்ளி நாள்கள் அவருக்கு பெரும்பாலும் கசப்பான அனுபவத்தைக் கொடுத்தது என்றே கூறலாம். இருந்தாலும், எந்த கேலியும் கிண்டலும் அவரது இசை ஆர்வத்தைத் தடுக்கவில்லை. சிறுவயதிலேயே பியானோ இசையைக் கற்றுக்கொண்டு, சிறந்த பியானோ இசைக்கலைஞராகத் திகழ்ந்தார். பள்ளியின் இசைக்குழுவிலும் இடம்பிடித்தார். இந்த காலக்கட்டத்தில்தான் ஃபாரூக், தன்னுடைய பெயரை ஃப்ரெடி என்று மாற்றினார். பெற்றோர்கள், நண்பர்கள் உள்பட அவரைச் சுற்றியுள்ளவர்கள் அந்தப் பெயரிலேயே அவரை அழைக்கத் தொடங்கினர். (அவருக்குப் பிடித்த மாதிரி ஃப்ரெடி என்ற பெயரையே இனி பயன்படுத்தலாம்) 1962-ல் ஃப்ரெடி, பெற்றோர்கள் தங்கியிருந்த தான்சான்யாவுக்கு திரும்பினார். 1964-ம் ஆண்டுக்குப் பிறகு அவரது குடும்பம் ராணுவ புரட்சிக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது.

ஃப்ரெடி மெர்குரி
ஃப்ரெடி மெர்குரி

இந்திய வம்சாவளி என்ற தன்னுடைய அடையாளத்தை ஃப்ரெடி மெர்குரி வெளிகாட்டாமலேயே இருந்துள்ளார். இன ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் இருந்த கால, என்பதால் அவர் அந்த அடையாளத்தை வெளியில் காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் Ealling கல்லூரியில் graphic design சேர்ந்து பயின்றார். அப்போது Wreckage என்ற இசைக்குழுவுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. பின்னர், ஸ்மைல் இசைக்குழுவின் முக்கிய நபர்களான பிரையன் மே மற்றும் ரோஜர் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. இந்த ஸ்மைல் குழுதான் பின்னாளில் Queen’ இசைக்குழுவாக மாறியது. `Queen’ இசைக்குழு தன்னுடைய முதல் பாடலை 1973-ம் ஆண்டு வெளியிட்டது. உலகம் முழுவதும் உள்ள ராக் இசைப்பிரியர்களின் கவனத்தைப் பெற்றது. எனினும், விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு `Bohemian Rhapsody’ என்ற பாடல் ஃப்ரெடியை அதிக நபர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. மிகப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஃப்ரெடியின் ஹை பிச் குரலும் அவரது ஸ்டேஜ் பிரசன்ஸும். ஃப்ரெடியின் குரல் வரம்பு நான்கு ஆக்டேவ்கள். உலகத்தில் அதிக ஆக்டேவ் இவருக்குதான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

 ஃப்ரெடி மெர்குரி
ஃப்ரெடி மெர்குரி

குயின் இசைக்குழுவை கலர்ஃபுல்லாக மாற்றிய ஃப்ரெடியால் அந்த இசைக்குழு இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளிலும் முன்னணி இசைக்குழுவாக வலம் வந்தது. தென் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டு சுமார் 2,31,000 ரசிகர்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி உலக சாதனையாக அந்த நேரத்தில் கருதப்பட்டது. தனியாகவும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார், ஃப்ரெடி. ஃப்ரெடியின் நிகழ்ச்சிகளைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. 1970 முதல் 1990 வரை உலகில் மிகப்பெரிய சுயாதீனப் பாடகராக ஏகப்பட்ட ரசிகர் படையை பின்னோக்கி வரவழைத்து வெற்றி நடை போட்டார். கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்தும் நிகழ்ச்சிகளை நடத்துவார். வெற்று உடலோடு வந்தும் நிகழ்ச்சிகளை நடத்துவார். பெண் வேடங்களில் வந்தும் நிகழ்ச்சிகளை நடத்தி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். `இன்றைக்கு ஃப்ரெடி மேடையில் என்ன மேஜிக் செய்யப்போகிறார்!’ என்பதைக் காணவே ரசிகர்கள் பட்டாளம் அலைமோதியது எனலாம். அவரது ஒரு குரலுக்கு லட்சக்கணக்கான குரல்கள் எதிர்வினையாற்றியதெல்லாம் எந்த இசைக்கலைஞனுக்கும் இன்றளவும் கிடைக்காத கிஃப்ட். அல்லது ஃப்ரெடிக்கு மட்டுமே தெரிஞ்ச மேஜிக். உலகம் முழுவதும் அவரது பாடல்கள் மில்லியன் கணக்கில் அன்றே விற்றுத் தீர்ந்தன. மைக்கேல் ஜாக்ஸன் உடனும் சேர்ந்து அவர் பாடல்களை பாடியுள்ளார். ஆனால், அவை முறைப்படி வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

ஃப்ரெடி மெர்குரி
ஃப்ரெடி மெர்குரி

Bohemian Rhapsody, Don’t Stop Me Now, Living On My Own, Mr. Bad Guy, I Was Born To Love You, Killer Queen, We Will Rock You உள்ளிட்ட பல பாடல்கள் இன்றைக்கும் பலரது ஹெட்ஃபோன்களில் ஒலிக்கும். அதுமட்டுமல்லாமல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று நிறுத்தியது. பாடல்களால் என்றைக்கும் நிலைத்து நிற்கும் ஃப்ரெடி மெர்குரி எவ்வளவுக்கு எவ்வளவு வெற்றியை சந்தித்தாரோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அதில் முக்கியமானது, ஃப்ரெடி, ஓரினச்சேர்க்கையாளர் என்ற செய்தி. இன்றைக்கு ஓரினச்சேர்க்கையாளர் என்பது சாதாரண விஷயமாக மாறி வருகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அதனை வெளிப்படுத்தினார். இது அவரின் பெயரில் களங்கத்தை ஏற்படுத்தியது. தனது ஆண் நண்பர்களுடனான படங்களையும் தைரியமாக வெளியிட்டார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினர். இன்றும் அவரது வாழ்க்கையில் நடந்த பெரும்பாலான விஷயங்கள் யூகங்களாக மட்டுமே இருக்கின்றன. ஃப்ரெடியின் வாழ்வில் காதலுக்கும் ஓர் அழகான பங்குண்டு. மேரி ஆஸ்டின் என்ற பெண்ணை அவர் நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். ஃப்ரெடி, ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்ததும் அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், கடைசி வரை இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். “எலிசபெத் டெய்லரைவிட எனக்குக் காதலர்கள் அதிகம்” என்று ஒருமுறை அவரே கூறினார்.

  ஃப்ரெடி மெர்குரி
ஃப்ரெடி மெர்குரி

ராக் இசையில் கொடிகட்டிப் பறந்த ஃப்ரெடி மெர்குரிக்கு எய்ட்ஸ் இருப்பது 1987-ம் ஆண்டு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது இறுதி நாள்களை நெருங்குவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகின. நோய் முற்றிய நிலையிலும் அவர் தனது இசையை கைவிடவில்லை. மரணத்தை மிகவும் தைரியத்துடன் எதிர்கொண்டார். நவம்பர் 24-ம் தேதி எய்ட்ஸ் பாதிப்பால் இறந்தார். “சுதந்திர ஓரினச்சேர்க்கையாளர்களின் கொள்கைப் பாடல்கள் போல அவரது பாடல்கள் இருந்தன. அவருக்கு அழகிய குரல் இருந்தது. ஆனால், அதை சாத்தானுக்கு சேவை செய்ய பயன்படுத்தினார். அவர் சொர்க்கத்தில் இல்லை நரகத்தில் இருக்கிறார். கடவுள் அவருக்கான கூலியைக் கொடுத்துவிட்டார்” என ஃப்ரெடி உயிருடன் இருந்தபோதும் இறந்தபோதும் விமர்சனங்கள் எழுந்துகொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. Bohemian Rhapsody என்ற பெயரில் அவரது வாழ்க்கையைத் திரைப்படமாகவும் எடுத்துள்ளனர். ஆஸ்கருக்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. திரைப்படத்தில் ஃப்ரெடி கால்களை தரையில் மிதித்தும் கைகளை தட்டியும் தாளமிடச்சொல்லும் காட்சிக்கு 60’ஸ் கிட் முதல் 2’கே கிட் வரை ஒட்டு மொத்த இசை ரசிகர்களும் அடிக்ட்.

இசை உலக மக்களின் மொழியாக இருக்கும் வரை அவரது பெயர் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். மக்கள் இசையை அணைத்துக்கொண்டிருக்கும் வரை அவரது கைகள் மக்களை அணைத்துக்கொண்டுதான் இருக்கும். ஆல்வேஸ்… வீ வில் ராக் ஃப்ரெடி மெர்குரி!

Also Read : Indira Gandhi: இந்திரா காந்தியின் கடைசி நாள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top