எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி: ஊழல் வழக்கு; 52 இடங்களில் ரெய்டு… எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிந்திருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், இதுதொடர்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 52 இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர் மீது போடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக இருந்தபோதே சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. தனது சகோதரர் அன்பரசன் பங்குதாரராக இருக்கும் செந்தில் அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி டெண்டர்களை ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2018-ல் தி.மு.க எம்.பி-யும் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணை குறித்த அறிக்கை தமிழக அரசிடமும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் எஸ்.பி வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் எஸ்.பி கங்காதரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள், 120 பி, 420, 409, 13 (2), 13 (1) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் குற்றவாளியாகவும், அவரது சகோதரர் அன்பரசன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 17 பேர் மீது ஊழல் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. வழக்குப் பதிவைத் தொடர்ந்து கோவை குனியமுத்தூரில் இருக்கும் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 35 இடங்களிலும், சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடம் என மொத்தம் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

2014-18 ஆண்டுகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக ஆடிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை – கோவை மாநகராட்சிகளில் டெண்டர் பணிகளை ஒதுக்கியதில் ரூ.810 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரியவந்தது. வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் 2012-13 முதல் 2018-19 வரையிலான வளர்ச்சி பற்றியும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, வரதன் இன்ஃப்ராஸ்ட்ரச்சர் நிறுவனத்தின் வளர்ச்சி குறிப்பிட்ட ஆண்டுகளில் 3,202%, சி.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் வளர்ச்சி 11,363%, கே.சி.பி இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 967%, ஏ.சி.இ டெக் – 354%, பி.செந்தில் அண்ட் கோ- 112%, ஆலயம் ஃபவுண்டேஷன் -2,636% அளவுக்கு வளர்ச்சி அடைந்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

கோவை குனியமுத்தூரில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வீட்டு முன்பு குவிந்திருக்கிறார்கள்.

மேலும், சென்னையில் இருக்கும் எம்.எல்.ஏ விடுதியிலும் ஆதரவாளர்கள் திரளத் தொடங்கியிருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Also Read – வெள்ளை அறிக்கை என்றால் என்ன… தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை.. 14 அம்சங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top