இதுவரை பல்வேறு பாடல்களை எழுதியிருக்கும், எழுதிவரும் `பொயட்டு’ தனுஷ்-ன் சிறந்த 5பாடல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பிறை தேடும் இரவிலே (மயக்கம் என்ன)
தனுஷ் முதன்முதலாக ‘பொயட்டு’ தனுஷாக மாறிய ஆல்பம் இதுதான். பொதுவாக நம் ஹீரோக்கள் அவ்வபோது ஜாலியாக சில பாடல்கள் எழுதுவதுண்டு. அப்படித்தான் தனுஷூம் இந்தப் படத்தில், பாடல் எழுதுகிறார்போல என நினைத்தால் தனுஷோ தனது முதல் ஆல்பத்திலேயே இப்படியொரு டஃபான சிச்சுவேசனுக்கு மிக அசத்தலான வரிகளை எழுதியிருப்பார். துறை சார்ந்த சறுக்கல்களால் மனச்சிதைவு அடைந்த கணவனையும் அவனுக்கு ஆறுதலாக இருக்கும் மனைவியையும் பற்றிய பாடலாக உருவாகியிருக்கும் ‘பிறை தேடும் இரவிலே’ பாடலில்,
‘அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலைகூடலில் சோகம் தீர்க்கும் போதுமா’

என இந்த பாடல் முழுக்க தேர்ந்தெடுத்த ஒரு முதிர்ச்சியான கவிஞன் போல எழுதியிருப்பார் தனுஷ்,
ஒய் திஸ் கொலவெறி (3)
தனுஷ் எழுதி,யாருமே கண்டுகொள்ளாமல் வெளியான இந்தப் பாடல், மெல்ல மெல்ல கேட்பவர்களை அடிக்ட் ஆக்கி, உலக அளவில் ட்ரெண்டும் ஆகி பிரதமர் அலுவலகம்வரை தனுஷைப் பற்றி பேசவைத்தது. இதெல்லாம்போக இன்று ஸூப் ஸாங்க்ஸ் என பாடலில் ஒரு இனமே உருவாகியிருக்க அதற்கு இந்தப்பாடல்தான் விருட்சமாக இருந்துவருகிறது.

கடல் ராசா நான் (மரியான்)
நான் ‘பொயட்டு’ தனுஷ் இல்ல, கவிஞன் தனுஷ் என அவ்வபோது நிரூபிக்கும் தனுஷ்,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செய்த சிறப்பான சம்பவம்தான் இந்தப் பாடல். பஞ்சம் பிழைக்க கடல் கடந்து சிக்கலில் சிக்கிக்கொண்ட ஒருவனின் நிலையை அவ்வளவு அழகாக எழுதியிருப்பார் தனுஷ்.

‘ஏக்கம் கொண்டு ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தை காட்டிடும்
கோமாளி நான்’
என நடிப்பில் அந்த கேரக்டருக்குள் புகுவதுபோல தன் எழுத்திலும் புகுந்து வெளிப்பட்டிருப்பார் தனுஷ்.
அம்மா..அம்மா..(வி.ஐ.பி)
தாயை இழந்த மகன்,அவனைத் தேற்றும் தாயின் ஆன்மா எனும் ஒரு சோகமான சிச்சுவேஷனில் தனுஷ்,
‘எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்’
என்பதுபோன்ற இயல்பான வரிகளைக் கொண்டே கேட்பவர்களின் உயிரை உருக்கியிருப்பார்.

இளமை திரும்புதே (பேட்ட)
எல்லாக் கலைஞர்களுமே ஆசைப்படும் ரஜினியுடன் ஒரு படம் எனும் வாய்ப்பு அப்போது ரஜினியின் மருமகனாக தனுஷ் இருந்ததானாலேயே இதில் அமைந்துவிடவில்லை. ஒரு பாடலாசிரியன் எனும் அளவிலேயே நான் அதற்குத் தகுதியானவன்தான் என
‘வாலிபத்தின் எல்லையில்…
வாசல் வந்த முல்லையே…
போகும் வரை போகலாம்…
என்னப் பிழையே’
என அந்த சிச்சுவேசனுக்கேற்ற பொருத்தமான வரிகளை எழுதி நிரூபித்திருப்பார் தனுஷ்.

தனுஷ் எழுதிய பாடல்களில் உங்களோட ஃபேவரைட் பாடல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: பன்முகக் கலைஞன் `தனுஷ்’ – சுவாரஸ்ய தகவல்கள்!