தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்த போராட்டம்னு 1962-ல திமுக நடத்திய விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தைச் சொல்லலாம். 1957 தேர்தல்ல 50 எம்.எல்.ஏக்களை ஜெயிச்சு சட்டமன்றத்துக்குள்ள போன திமுக, மூன்றாவது முறையா முதல்வரான காமராஜருக்கு எதிரா தீவிரமாக களமாடுச்சு.
விலைவாசி உயர்வு பிரச்னைகளை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பேசியவற்றை ஆளும் அரசு காதுகொடுத்து கேட்கவே இல்லை. விலைவாசி உயர்வு நியாயமானதுதான்னு அரசு விளக்கம் கொடுக்கவே, 1962 ஜூலை 19-ல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்னால ஒரு நாள் அடையாள மறியல் போராட்டம் நடத்துவதாக திமுக அறிவித்தது. இதை ஆளும் காங்கிரஸ் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள் கொத்துக் கொத்தாகக் கைது செய்யப்பட்டார்கள்.2,500 பேரை மட்டுமே அடைக்கும் அளவுக்கு இடவசதி இருந்த சென்னை சென்ட்ரல் ஜெயில்ல ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவங்களை அரசு அடைத்தது. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க தொடர்ந்த கைது படலங்களோட விளைவா சுமார் 20,000 பேர்கிட்ட அன்னிக்கு அரெஸ்ட் ஆனாங்க. அந்த டைம்ல திமுகவுக்கு ஆதரவா இருந்தவங்க மேலயும் அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிட்டது. அண்ணா, கலைஞர் போன்ற திமுகவின் முதற்கட்ட தலைவர்கள் ஜெயில்ல இருந்த டைம்ல திருச்செங்கோடு எம்.பி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுது.
அங்க காங்கிரஸ் சார்புல ஏற்கனவே ஜெயிச்சிருந்த டாக்டர் சுப்பராயன் மகாராஷ்டிர மாநில கவர்னரானதுனால வந்த இடைத்தேர்தல் அது.அந்தத் தேர்தல்ல காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டர், திமுக சார்பில் செ.கந்தப்பன் ஆகியோர் களத்துல இருந்தாங்க. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆள்பலம், பண பலம், அரசு இயந்திரத்தின் சப்போர்ட் இதோட கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், ம.பொ.சியோட தமிழரசுக் கழகம் மாதிரியான கட்சிகளோட ஆதரவும் இருந்துச்சு. அதேநேரம் திமுகவின் முன்னணி தலைவர்கள் ஜெயில்ல இருந்த டைம்ல அந்தக் கட்சி வேட்பாளருக்காக இரண்டாம் கட்டத் தலைவர்கள்தான் பிரசாரம் செஞ்சாங்க. 1962 ஆகஸ்ட் 11-ம் தேதி நடந்த திருச்செங்கோடு எம்.பி தொகுதி இடைத்தேர்தல்ல ஆளும் கட்சியின் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி திமுகவின் செ.கந்தப்பன் வெற்றிபெற்றார். தமிழக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வேட்பாளர் தோற்ற வரலாறு அங்கிருந்துதான் தொடங்குச்சு.