ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்துகொள்வதே அதிர்ச்சியாக இருந்த நிலையில், மனைவியையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி பேரதிர்ச்சியாகவே இருக்கிறது. நீதிமன்ற தடைக்குப் பிறகு அதை உடைத்து ஆக்ரோஷமான பெரும் ஆரவார விளம்பரங்களுடன் மீண்டும் வந்து ஓர் உயிர்க்கொல்லி விளையாட்டாக வளர்ந்து நிற்கிறது.
ஏன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் ஒருவர் எப்படி அவ்வளவு பெருந்தொகைகளை இழந்துகொண்டே இருக்கிறார்?
ஏன் இந்த விளையாட்டுகளில் ஒருவரால் வெல்லவே முடியாது?
The house always wins…
மகாபாரத சகுனியின் தாயக்கட்டை முதல், அமெரிக்க பாலைவனத்தை சொர்க்கபுரியாக மாற்றிய கேஸினோக்களின் காலந்தொட்டு, இப்போது ஆன்லைன் ரம்மி வரைக்கும் ஒரு தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அது, “The house always wins…”
அதாவது, இந்த சூது விளையாட்டுகள் எப்போதுமே அதை நடத்துபவர்கள் வெற்றி பெறும்படியே வடிவமைக்கப்படும். விளையாடுபவர்கள் எவ்வளவு பணம் ஜெயித்தாலும் மீண்டும் மீண்டும் விளையாடும் போது அந்த வெற்றி பெற்ற பணம் அந்த விளையாட்டிலேயே முதலீடு செய்யப்பட்டு சூதாட்டத்தை நிகழ்த்துபவருக்கு பெரும் லாபம் வந்து சேரும்.
விளையாட்டை நிகழ்த்துபவருக்கு வெற்றி தோல்வி முக்கியமே அல்ல, அவருக்கு முக்கியம் ‘லாபம்’. ஒரு விளையாட்டில் The House தோற்பதால் நேரடியாக பணம் இழந்ததாக வெளியில் தோன்றும்; ஆனால், வென்றவர் மீண்டும் மீண்டும் விளையாடி அதை விட அதிகமான தொகையை இழந்துவிடுவார்.
ஏனென்றால், “உருட்டு அப்படி…!”
பொதுவாக மனிதர்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ அதையே மீண்டும் மீண்டும் அவர்களின் மனம் தேடும் என்று தத்துவார்த்தரீதியாக பேசினாலும், அறிவியல் ரீதியாகவும் இதற்கு விளக்கம் இருக்கிறது.
Dopamine என்ற நம் உடலில் சுரக்கும் வேதிப்பொருளான nuerotransmitter-களுக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு அது “Feel-Good Hormone”. அதாவது எது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்குமோ அதையே மீண்டும் மீண்டும் நம்மை செய்யத் தூண்டுவது இதன் வேலை. மனித மூளையில் மகிழ்ச்சியையும் பரிசுப்பொருள்களையும் எதிர்பார்க்கும் பகுதிதான் Gambling Addiction-க்கும் காரணம்.

வெற்றி தரும் மகிழ்ச்சியும், பரிசாகக் கிடைக்கும் பணமும் அவரை மீண்டும் மீண்டும் விளையாட வைக்கும். மீண்டும் மீண்டும் விளையாடும் போது அவர் வென்றதை விட அதிகமாக இழக்க ஆரம்பிப்பார். “அடுத்தது ஜெயிப்போம்… அடுத்தது ஜெயித்துவிடுவோம்… என்று மொத்தமாக இழந்து நிற்பார்…”
Also Read : Bulli Bai: இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்திய `புல்லி பாய்’ செயலி – 3 பேர் கைது… பின்னணி என்ன?
முதல் முறை அவர் வென்ற தொகையை வைத்தே அடுத்தடுத்து விளையாடும் போது அவர் அங்கு விளையாடும் தொகையின் உண்மையான மதிப்பையும் புரிந்துகொள்ள கால அவகாசம் எடுக்கும். அவர் விளையாடும் தொகையின் மதிப்பு புரியும் போது பலகட்ட தோல்விகளைச் சந்தித்திருப்பார். பல லட்சங்களை இழந்திருப்பார். இப்போதைய ஆன்லைன் ரம்மி கேம்களில் போனஸாக முதல் ஆட்டத்திற்கு சில ஆயிரங்களை வழங்கி அந்த மதிப்பையும் மறக்கச் செய்துவிடுகிறார்கள்.
2010-ம் ஆண்டு மனநலம் தொடர்புடைய ஓர் ஆய்வறிக்கையில் “கேஸினோக்கள் ஒளியமைப்பு மற்றும் இசையின் மூலமாக ஒருவரின் டோப்பமைன் சுரக்கும் அளவை மறைமுகமாக அதிகரிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டது. ஆன்லைன் ரம்மிக்களில் இது என்னும் எளிது, இதற்கேற்ற வடிவில் வடிவமைக்கப்படும் அனிமேஷன்களும், நிறங்களும், இசையும் இந்த வேலையை கணகச்சிதமாக செய்து முடிக்கின்றன.

தற்போதை ஆன்லைன் ரம்மிக்களும் “The house always wins…” என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்தே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, இந்த விளையாட்டுகளுக்கு தொழில்நுட்பம் கூடுதலாக இன்னொரு வசதியையும் தருகிறது. ஒரு சூதாட்டத்தில் பங்குபெறும் நபர்களில் ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களோ BOT-களாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். இது, The House எப்போது வெற்றி பெறுவதற்கான கூடுதல் வாய்ப்பையும் வழங்கியது.
“இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அத்தனையிலும் மனிதன் மட்டுமே அறிவில் சிறந்தவன்” என்று மனிதனே சில நூறு ஆண்டுகாலம் சொல்லிக்கொண்டான். ஆனால், அவனுக்கு சவால் விடும் ஒன்றை மனிதன் உருவாக்கினான். மனிதனின் அறிவை பறைசாற்ற அவன் பயன்படுத்திய விளையாட்டுகளில் ஒன்றான செஸ் போட்டியில் மனிதனின் இந்த அறிவில் சிறந்தவன் என்ற மமதை உடைந்தது. உலக செஸ் சாம்பியனான கேரி கேஸ்பரோவ் Deep Blue என்ற சூப்பர் கம்ப்யூட்டருடன் விளையாடிய செஸ் போட்டிகளில் கிடைத்த சில தோல்விகளும் அந்த சூப்பர் கம்ப்யூட்டர் வைத்த சில அட்டகாச மூவ்களையும் பார்த்தபோது “தலை சுத்திருச்சு”.

அந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் பல்லாயிரக்கணக்கான போட்டிகளை மீண்டும் விளையாடி கற்றது, விளையாட்டின் விதிமுறைகளை மட்டும் தெரிந்து கொண்டு ஒரு மைக்ரோ நொடியில் பல்லாயிரக்கணக்கான மூவ்களை சமயோசிதமாக மனிதனை விட அதிகமாக யோசித்தது. மனிதனை மீண்டும் மீண்டும் வெற்றிகொண்டது. மனிதன் அறிவில் சிறந்தவன் என தம்பட்டம் அடித்ததில் இருந்து அறிவில் சிறந்ததை உருவாக்கியவன் என்ற கட்டத்துக்கு நகர்ந்துவிட்டான்.
செஸ் போட்டியில் மட்டுமல்ல, அத்தனை டிஜிட்டல் விளையாட்டுகளிலும் இத்தகைய Super Efficient Bots கலக்கியெடுக்கின்றன. உலக சாம்பியன்களே இந்த BOT-களின் முன்பு சரணடையும் போது சாமனியர்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் யாரிடம் விளையாடுகிறார்கள் என்பது தெரியாமலே தோற்று மண்ணைக் கவ்வுகிறார்கள்.

சில போட்டிகளில் வெற்றியும் சில போட்டிகளில் தோல்வியும் கிடைக்கும் இந்தப் போட்டியில் சூதாட்டத்துக்கு அடிமையாவதற்கான சாத்தியங்களை முதற்கட்ட வெற்றிகள் வழங்கும், இதனால் சுரக்கும் டோப்பமைன் அவர்களை மீண்டும் மீண்டும் விளையாட வைக்கும். இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களும் அல்காரிதமும் இறுதியாக ஒரு வேலையை செய்யும்.
அது “The house always wins…”
0 Comments